ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல்: ரியல் எஸ்டேட் அதிபர் கைது

ஜி-ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு கொடுக்கப்பட்டது.
இந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
கெவின் (வயது 53) என்பவர் செல்போன் மூலம் மிரட்டி வருகிறார். எங்கள் நிறுவனத்துக்கு அவதூறு ஏற்படும் வகையில் பிரபல வார பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகும் என்றும், அவ்வாறு செய்தி வெளியாகாமல் இருக்க ரூ.50 லட்சம் தர வேண்டும் என்றும் மிரட்டல் விடுத்தார்.
நாங்கள் பணம் கொடுக்கவில்லை. இதனால் குறிப்பிட்ட வார பத்திரிகையில் எங்கள் நிறுவனம் பற்றி அவதூறு செய்தி வெளியானது. மேலும் சமூக வலைத்தளங்களிலும் இதுபோன்ற அவதூறு தகவல்கள் பரப்பப்படும் என்றும் கெவின் மிரட்டல் விடுக்கிறார். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக மயிலாப்பூர் போலீசார் கொலை மிரட்டல் உள்பட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். கெவின் நேற்று கைது செய்யப்பட்டார். இவரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. கெவின் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.