டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் பயணிகளை ரெயில்வே பாதுகாப்பு படையினரிடம் டிக்கெட் பரிசோதகர்கள் ஒப்படைக்க வேண்டும் - சென்னை கோட்ட மேலாளர் பேட்டி


டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் பயணிகளை ரெயில்வே பாதுகாப்பு படையினரிடம் டிக்கெட் பரிசோதகர்கள் ஒப்படைக்க வேண்டும் - சென்னை கோட்ட மேலாளர் பேட்டி
x

ரெயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் பயணிகளை ரெயில்வே பாதுகாப்பு படையினரிடம் டிக்கெட் பரிசோதகர்கள் ஒப்படைக்க வேண்டும் சென்னை கோட்ட மேலாளர் கணேஷ் கூறினார்.

சென்னை

தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்ட மேலாளர் கணேஷ் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார், அப்போது அவர் கூறியதாவது:-

ரெயில்வேயில் உள்ள பிரச்சினைகளை கண்டறிந்து அதற்கு தீர்வு காணும் வகையிலான கண்டுபிடிப்புகள் மற்றும் திட்டங்களுக்கு ரூ.1½ கோடி வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் இணையதளத்தின் வழியாக கண்டுபிடிப்பாளர்களை எந்தவித முறைகேடும் இன்றி நியாயமான முறையில் தேர்ந்தெடுக்க உள்ளோம். அதேபோன்று கண்டுபிடிப்பாளர்கள் உருவாக்குகின்ற தொழில்நுட்பங்களுக்கு அவர்களுக்கு உரிய உரிமங்கள் வழங்கப்படும்.

ரெயில் தண்டவாளங்களில் ஏற்படும் விரிசல்கள் குறித்து தற்போது நடத்தப்படும் ஆய்வுகள் அனைத்தும் 'அல்ட்ரா சோனிக்' கருவிகளின் உதவியால் நடந்து வருகிறது. இவற்றை தானியங்கி முறையில் செயல்படுத்தி விரிசல்கள் குறித்து முன்பே அறியும் வகையில் தீர்வுகளை காண உள்ளோம்.

கண்காணிப்பு கேமராக்களின் உதவியோடு ரெயில்வே பாதுகாப்பு படையினர் தினமும் அவர்களது பணியை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். அதன் மூலம் நடைபெறும் அசம்பாவிதங்களை தடுத்து திறம்பட பணியாற்றி வருகின்றனர். கண்காணிப்பு கேமராக்கள் 100 சதவீதம் பயன்பாட்டில் இருந்து வருகிறது'' என்றார்.

மேலும் நிருபர்கள் ''மின்சார ரெயில்களில் டி.டி.ஆர் (டிக்கெட் பரிசோதகர்கள்) பயணச்சீட்டு இன்றி பயணம் செய்பவர்களிடம் இருந்து செல்போன் அல்லது ஆதார் கார்டுகளை பறித்து விடுகின்றனர்'' என்று தெரிவித்தனர்.

இதற்கு பதில் அளித்த அவர், ''டிக்கெட் இல்லாமல் பயணிப்பவர்களை ரெயில்வே பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைப்பதே டி.டி.ஆர்.களின் பணியாகும். இதுகுறித்து இதுவரை எங்களிடம் புகார்கள் எழுப்பப்படவில்லை, எனவே இதுகுறித்து விசாரணை நடத்தி பிரச்சினைகள் இருந்தால் கண்டிப்பாக தீர்வு காணப்படும்'' என்றார்.


Next Story