திண்டிவனம் நகைக்கடையில் நூதன முறையில் 5 பவுன் நகை அபேஸ்


திண்டிவனம் நகைக்கடையில் நூதன முறையில் 5 பவுன் நகை அபேஸ்
x
தினத்தந்தி 18 Oct 2023 6:45 PM GMT (Updated: 18 Oct 2023 6:46 PM GMT)

திண்டிவனத்தில் நகை வாங்குவது போல் நடித்து நூதன முறையில் 5 பவுன் நகையை அபேஸ் செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்

திண்டிவனம்,

நகைக்கடை

திண்டிவனத்தை சேர்ந்தவர் திலீப் குமார் (வயது 47). இவர் அதே பகுதியில் உள்ள கிருஷ்ணப்பிள்ளை வீதியில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மகன் பரத் குமார் (20). கடந்த 15-ந்தேதி பரத்குமார் மட்டும் கடையில் இருந்துள்ளார்.

அப்போது, அங்கு வந்த 2 மர்மநபர்கள் பரத்குமாரிடம், நகை வாங்க வேண்டும். டிசைன்களை காட்டுங்கள் என்றனர். அதன்படி, அவரும் நகை டிசைன்களை எடுத்துக்காட்டினார். இதையடுத்து அந்த மர்மநபர்கள் 2 பேரும், பரத்குமாரிடம் நைசாகி பேசி, அவரது கவனத்தை திசை திருப்பினர். அந்த சமயத்தில், ஒருவர் கல்லாப்பெட்டியில் கைவிட்டு, அதிலிருந்த 5 பவுன் நகையை நைசாக எடுத்து பாக்கெட்டில் வைத்தார். இதையடு்த்து அவர்கள் இருவரும் அங்கிருந்து சென்று விட்டனர்.

5 பவுன் நகை அபேஸ்

இந்த நிலையில், கடைக்கு திரும்பி வந்த திலீப் குமார் கல்லாப்பெட்டியை பார்த்த போது, அதில் வைத்திருந்த 5 பவுன் நகை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது கடைக்கு வந்த 2 பேர் நகை வாங்குவது போல் நடித்து, நூதன முறையில் 5 பவுன் நகையை அபேஸ் செய்தது தெரிந்தது.

இது குறித்து திலீப்குமார் திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ ஆதாரங்களை வைத்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story