தாம்பரம் அருகே டிப்பர் லாரி மோதி 2 வாலிபர்கள் பலி


தாம்பரம் அருகே டிப்பர் லாரி மோதி 2 வாலிபர்கள் பலி
x

தாம்பரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.

செங்கல்பட்டு

டிப்பர் லாரி மோதல்

சென்னை தாம்பரம் அடுத்த செம்பாக்கம், காமராஜபுரம், பவநந்தியார் தெருவைச் சேர்ந்தவர் அய்யாமுத்து(வயது 22). டிரைவரான இவர், தன்னுடைய நண்பரான கீழ்கட்டளை காந்தி நகரைச் சேர்ந்த அரவிந்தன்(19) என்பவருடன் நேற்று அதிகாலை தங்களது நண்பர்களை பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தாம்பரத்தில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிளை அய்யாமுத்து ஓட்டினார். அவருக்கு பின்னால் அரவிந்தன் அமர்ந்து இருந்தார். தாம்பரம்-வேளச்சேரி சாலையில் சேலையூர் போலீஸ் நிலையத்தை கடந்து காமராஜபுரம் நோக்கிசென்றபோது, இவர்களுக்கு பின்னால் தாம்பரத்தில் இருந்து மேடவாக்கம் நோக்கி எம்.சாண்ட் மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி, இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

2 பேர் பலி

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட இருவரும் சாலையில் விழுந்தனர். இருவருக்கும் இடது கால் உடைந்ததுடன், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அய்யாமுத்து, அரவிந்தன் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், 2 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரி டிரைவரான சேகர்(38) என்பவரை கைது செய்தனர்.


Next Story