திருச்செந்தூர்வெயிலுகந்த அம்மன் கோவில் மாசித் திருவிழா


திருச்செந்தூர்வெயிலுகந்த அம்மன் கோவில் மாசித் திருவிழா
x
தினத்தந்தி 13 Feb 2023 6:45 PM GMT (Updated: 13 Feb 2023 6:46 PM GMT)

திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் கோவில் மாசித் திருவிழா திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் கோவில் மாசித் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மாசி திருவிழா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உபகோவிலான வெயிலுகந்த அம்மன் கோவில் மாசித் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா வருகிற 22-ந் தேதி வரை நடக்கிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகம், அலங்கமாகி தீபாராதனை நடந்தது. கோவிலிருந்து கொடிப்பட்டம் பல்லக்கில் புறப்பட்டு, வீதி உலா வந்து மீண்டும் கோவிலை சேர்ந்தது.

கொடியேற்றம்

பின்னர் 11 கும்பங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. காலை 5.20 மணிக்கு பாலசுப்பிரமணியம் வல்லவராயர் கொடியேற்றினார். தொடர்ந்து கொடிமர பீடத்திற்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் கொடிமர பீடம் தர்பை புல்லாலும், வண்ண மலர்களாலும், பட்டாடைகளாலும் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், கோவில் கண்காணிப்பாளர் ஆனந்தராஜ், மணியம் நெல்லையப்பன், வேல்ராமகிருஷ்ணன், வேலாண்டி ஓதுவார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தேரோட்டம்

திருவிழா காலங்களில் தினமும் காலையும், மாலையும் அம்மன் வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 22-ந் தேதி (புதன்கிழமை) காலையில் நடக்கிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Next Story