திருப்புவனம் புஷ்பவனேசுவரர்-சவுந்திரநாயகி அம்மன் கோவில் கொடியேற்றம்


திருப்புவனம் புஷ்பவனேசுவரர்-சவுந்திரநாயகி அம்மன் கோவில் கொடியேற்றம்
x
தினத்தந்தி 23 July 2023 6:45 PM GMT (Updated: 23 July 2023 6:46 PM GMT)

திருப்புவனம் புஷ்பவனேசுவரர்-சவுந்திரநாயகி அம்மன் கோவில் கொடியேற்றம் நடந்தது

சிவகங்கை

திருப்புவனம்

திருப்புவனத்தில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பிரசித்தி பெற்ற புஷ்பவனேசுவரர்-சவுந்திரநாயகி அம்மன் கோவில் உள்ளது. அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்ற சமய புலவர்களால் பாடப்பெற்ற புண்ணிய ஸ்தலமாக விளங்குகிறது. சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் 36-வது திருவிளையாடல் நடைபெற்ற கோவில். இந்த கோவிலில் ஆடித்தபசு திருவிழா ஆண்டுதோறும் 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக நேற்று முன்தினம் மாலை விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது. நேற்று காலை அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு பூஜையுடன் கொடியேற்றப்பட்டு, சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. விழாவை முன்னிட்டு சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியாக ஆகஸ்டு 2-ந் தேதி சுவாமி, அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேசுவரர் ரத வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். விழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் தலைமையில் சிவகங்கை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, திருப்புவனம் சரக கண்காணிப்பாளர் வேலுச்சாமி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Next Story