டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2ஏ தேர்வு விழுப்புரம் மாவட்டத்தில் 29,260 பேர் எழுதினர்


டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2ஏ தேர்வு  விழுப்புரம் மாவட்டத்தில் 29,260 பேர் எழுதினர்
x

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2ஏ தேர்வை 29,260 பேர் எழுதினர்.

விழுப்புரம்

விழுப்புரம்,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ பதவிகளில் உள்ள 5,529 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதன்படி இந்த தேர்வுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து 11 லட்சத்து 78 ஆயிரத்து 175 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

மாநிலம் முழுவதும் 117 இடங்களில் 4,012 தேர்வு மையங்களில் நேற்று டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 மற்றும் 2ஏ தேர்வுக்கான முதல்நிலை தேர்வு நடைபெற்றது. வழக்கமாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடக்கும். இந்த முறை தேர்வுகள் காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

29,260 பேர் எழுதினர்

விழுப்புரம் மாவட்டத்தில் குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ தேர்வு 93 மையங்களில் நடந்தது. இத்தேர்வை எழுதுவதற்காக 33,902 பேர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வு மையத்திற்கு காலை 8 மணியில் இருந்தே தேர்வர்கள் வரத்தொடங்கினர்.

அவர்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னர் ஹால் டிக்கெட் மற்றும் அடையாள அட்டையுடன் வந்தவர்கள் மட்டுமே தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். காலை 9 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் தேர்வர்கள் அனுப்பப்பட்டனர். 9 மணிக்கு பிறகு வந்தவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை.

அதுபோல் தேர்வு மையத்திற்குள் செல்போன் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டது.தேர்வுக்கான வினாக்கள் கொள்குறி வகையில் இருந்தது. மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்பட்டு 300 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடந்தது. மாவட்டத்தில் இத்தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் 4,642 பேர் தேர்வு எழுத வரவில்லை. 29,260 பேர் வந்திருந்து ஆர்வமுடன் தேர்வு எழுதினர்.

மாற்றுத்திறனாளி தேர்வர்கள், தேர்வு எழுத தரைத்தளத்தில் தனி அறை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு பகல் 12.30 மணிக்கு முடிந்தது. இருப்பினும் 12.45 மணி வரை தேர்வர்கள், தேர்வுக்கூடத்தில் அமர வைக்கப்பட்டு அதன் பின்னர் வெளியே அனுப்பப்பட்டனர்.

பறக்கும் படை கண்காணிப்பு

இத்தேர்வு பணி மற்றும் கண்காணிப்பு பணிகளில் விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் தலைமையில் 2 முதன்மை கண்காணிப்பாளர் அலுவலரும், 9 பறக்கும் படை குழுவினர்களும், 18 நடமாடும் கண்காணிப்பு அலுவலர்களும், 156 ஆய்வு அலுவலர்களும் ஈடுபட்டனர்.

தேர்வின்போது எவ்வித முறைகேடும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் 100-க்கும் மேற்பட்ட வீடியோ கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வீடியோ பதிவு செய்யப்பட்டது. மேலும் இத்தேர்வையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் 93 தேர்வு மையங்களிலும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



Next Story