பெரம்பலூரில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வினை 16,114 பேர் எழுதினர்


பெரம்பலூரில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வினை 16,114 பேர் எழுதினர். 2,925 பேர் தேர்வு எழுதவில்லை.

பெரம்பலூர்

குரூப்-4 தேர்வு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 19,039 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து, 64 மையங்களில் குரூப்-4 தேர்வு நேற்று நடந்தது. தேர்வு அறைக்குள் தேர்வாளர்களை 9 மணி வரை மைய கண்காணிப்பாளர்கள் அனுமதித்தனர். மேலும் தேர்வு அறை நுழைவு சீட்டு (ஹால் டிக்கெட்) பரிசோதனை செய்து தேர்வாளர்களை மட்டும் தேர்வு அறைக்குள் அனுமதித்தனர். சரியாக 9.30 மணியளவில் தொடங்கிய தேர்வு மதியம் 12.30 மணி வரை நடந்தது.

200 கொள்குறி வகை வினாக்கள் கேட்கப்பட்டு, 300 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடந்தது.

16,114 பேர் தேர்வு எழுதினர்

பெரம்பலூர் மாவட்டத்தில் 16,114 பேர் குரூப்-4 தேர்வினை எழுதினர். 2,925 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த தேர்வினை கண்காணிப்பதற்காக துணை ஆட்சியர் நிலையில் பறக்கும் படை அலுவலர்களும், இயங்கு குழுக்கள் மற்றும் கண்காணிப்பாளர், உதவியாளர் நிலையில் தேர்வுக்கூட நடைமுறைகளை கண்காணித்திட ஆய்வு அலுவலர்களும் தேர்வு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் தேர்வு பாதுகாப்பு பணிகளில் போலீசாரும், துப்பாக்கி ஏந்திய போலீசாரும் ஈடுபட்டனர்.

அனைத்து தேர்வு மையங்களிலும் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.


Next Story