நகராட்சி அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை
சங்கரன்கோவிலில் ஆணையாளர் குடியிருப்பு கட்டியதில் எழுந்த முறைகேடு புகார் தொடர்பாக நகராட்சி அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை நடத்தினர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் ஆணையாளர் குடியிருப்பு கட்டியதில் எழுந்த முறைகேடு புகார் தொடர்பாக நகராட்சி அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை நடத்தினர்.
முறைகேடு புகார்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கடந்த 2016 முதல் 2018 வரை நிதி ஆண்டுகளில் அரசு மூலம் ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தி நகராட்சி சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் கட்டிடம் கட்டுவது, சாலை மேம்பாட்டு பணி, பாதசாரிகள் நடைபாதை அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் முறைகேடு நடத்திருப்பதாக புகார்கள் எழுந்தது.
மேலும் சங்கரன்கோவில் கோமதி நகர் காலனியில் நகராட்சி ஆணையர் குடியிருப்பு கட்டியதில் முறைகேடு நடந்து இருப்பதாக புகார் வந்தது. இதையடுத்து நெல்லை லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சங்கரன்கோவிலில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
அதிகாரிகளிடம் விசாரணை
இந்த ஆய்வின் போது அப்போதைய நகராட்சி ஆணையாளர் ,பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் நகராட்சி ஒப்பந்ததாரர் உள்ளிட்டவர்களிடம் லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் கட்டிட அளவீட்டில் முறைகேடு நடந்திருப்பதாக தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சில இடங்களில் சாலையே போடாமல் போட்டு விட்டதாக எழுந்த புகார் மீதும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கரன்கோவிலில் லஞ்ச ஒழிப்பு துறையின் திடீர் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.