இன்று தமிழ்நாடு நாள் விழா: தமிழகம் முழுவதும் 20 இடங்களில் கலை நிகழ்ச்சிகள்


இன்று தமிழ்நாடு நாள் விழா: தமிழகம் முழுவதும் 20 இடங்களில் கலை நிகழ்ச்சிகள்
x

தமிழ்நாடு நாள் விழாவையொட்டி, தமிழகம் முழுவதும் 20 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுவதாக கலை பண்பாட்டுத்துறை அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் சே.ரா.காந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய ஜூலை 18-ந்தேதி அரசு சார்பில் தமிழ்நாடு நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. கலை பண்பாட்டுத்துறை சார்பில் 18-ந்தேதி (இன்று) கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் வழங்குவதோடு, மணல் சிற்பம் உருவாக்கப்படும் மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை, செம்மொழி பூங்கா மற்றும் சென்டிரல் சதுக்கம் ஆகிய 4 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

வடலூர் முத்துலீப் குழுவினரின் நையாண்டி மேளம், புரவியாட்டம், திருப்பத்தூர் குமரேசன் குழுவினரின் பம்பை கைச்சிலம்பாட்டம், காவடியாட்டம், ராணிபேட்டை வேதகிரி குழுவினரின் கொக்கலிக் கட்டையாட்டம், தேனி செல்வகுமார் குழுவினரின் கரகாட்டம், கருப்பசாமி ஆட்டம், திண்டுக்கல் முர்த்தி குழுவினரின் பறையாட்டம், ராமநாதபுரம் லோக.சுப்பிரமணியம் குழுவினர் சிலம்பாட்டம், விருதுநகர் செல்வராணி குழுவினரின் கழியல் ஆட்டம், ஒயிலாட்டம், சாத்தூர் தங்கமுத்து குழுவினரின் தப்பாட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும்.

கலை பண்பாட்டுத்துறை சார்பில் தமிழ்நாட்டில் 20 இடங்களில் தமிழ்நாடு நாள் விழா கொண்டாட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். கோவை, மதுரை, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரிகள் வாயிலாகவும் இயல், இசை, நாட்டியம் மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, கரூர், பெரம்பலூர், விழுப்புரம், கடலூர், சீர்காழி, திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் அரசு இசைப்பள்ளிகள் வாயிலாகவும் இயல், இசை, நாட்டியம் மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகளோடு மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story