நாய்குட்டி என கருதி மீட்டபோது பேரதிர்ச்சி: சாக்கடையில் வீசப்பட்ட பச்சிளங்குழந்தை உயிருடன் மீட்பு


நாய்குட்டி என கருதி மீட்டபோது பேரதிர்ச்சி: சாக்கடையில் வீசப்பட்ட பச்சிளங்குழந்தை  உயிருடன் மீட்பு
x
தினத்தந்தி 7 Feb 2024 3:33 AM GMT (Updated: 7 Feb 2024 3:54 AM GMT)

பச்சிளங்குழந்தையை சாக்கடையில் வீசிச்சென்ற பெற்றோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மும்பை,

மும்பை மலாடு கிழக்கு ஜித்தேந்திரா சாலையில் உள்ள திறந்தவெளி சாக்கடையில் சாக்குப்பையில் பொதிந்த நிலையில் நாய்குட்டி சிணுங்கும் சத்தம்கேட்டது. அந்த வழியாக சென்ற சமூக ஆர்வலர் ஒருவர் சத்தத்தை கேட்டு பரிதாபம் அடைந்தார். நாய்குட்டியை சாக்கடையில் யாரேனும் வீசி சென்றதாக கருதி விலங்குகள் நல அமைப்பினருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து விலங்குகள் நல அமைப்பினர் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் சாக்கடையில் கிடந்த சாக்குப்பையை கைப்பற்றி அதனை பிரித்து பார்த்தனர்.

அதில் பிறந்து சில தினங்களே ஆன பச்சிளங்குழந்தை உயிருடன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி தின்தோஷி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு சென்று பச்சிளங்குழந்தையை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது பற்றி விலங்குகள் நல ஆர்வலர் டாக்டர் நந்தினி குல்கர்னி கூறுகையில், சாக்கடையில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை சரியான நேரத்தில் ஆஸ்பத்திரியில் அனுமதித்ததால் அது உயிர் பிழைத்தது. இதனால் அக்குழந்தைக்கு 'ஜுவிகா' என்று பெயர் வைத்து உள்ளோம் என்றார்.

இது குறித்து தின்தோஷி போலீசார் வழக்குப்பதிவு செய்து பச்சிளங்குழந்தையை சாக்கடையில் வீசிச்சென்ற பெற்றோரை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story