10½ லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு வழங்க டோக்கன் வினியோகம் தொடங்கியது


10½ லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு வழங்க டோக்கன் வினியோகம் தொடங்கியது
x

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10½ லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு வழங்க டோக்கன் வினியோகம் செய்யும் பணி தொடங்கியது.

விழுப்புரம்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதத்தில் அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இந்த பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் வருகிற 9-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் 6 லட்சத்து 14 ஆயிரத்து 906 பேருக்கும், மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர் குடும்பங்களை சேர்ந்த 434 பேருக்கும் ஆக மொத்தம் 6 லட்சத்து 15 ஆயிரத்து 340 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

வீடு, வீடாக டோக்கன் வினியோகம்

ரேஷன் கடைகளில் பொதுமக்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும்பொருட்டு அந்தந்த ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் வீடு, வீடாகச்சென்று பொதுமக்கள் எந்த நாட்களில், எந்த நேரத்தில் கடைக்குச்சென்று பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்ற விவரத்தை தெரிவித்து டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி அந்தந்த ரேஷன் கடை பணியாளர்கள் நேற்று முதல் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். வருகிற 8-ந் தேதிக்குள் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் டோக்கன் வழங்கும் பணியை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கலெக்டர் ஆய்வு

இதனிடையே மாவட்ட கலெக்டர் மோகன், நேற்று மாலை விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட தனலட்சுமி கார்டன், ரங்கநாதன் தெரு ஆகிய பகுதிகளில் வீடு, வீடாக பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வரும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பச்சரிசியை சுவைத்து பார்த்து அரிசியின் தரத்தையும் ஆய்வு செய்தார்.

அப்போது கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் யசோதாதேவி, விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் மகாராணி உள்பட பலர் உடன் இருந்தனர்.

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டியில் டோக்கன் வழங்கும் பணியை மாவட்ட வழங்கல் அலுவலர் மகாராணி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் அப்பகுதியில் உள்ள .ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மத்திய, மாநில அரசுகள் மூலம் வழங்கப்படும் பொருட்களுக்கு தனித்தனியான பில்களை பொது மக்களுக்கு வழங்க வேண்டும் என விற்பனையாளர்களுக்கு அவர் உத்தரவிட்டார். அப்போது வட்ட வழங்கல் அலுவலர் வேலு, வருவாய் ஆய்வாளர் தயாநிதி, வட்ட பொறியாளர் சுரேஷ், விற்பனையாளர்கள் புருஷோத்தமன், ராஜசேகர், கூட்டுறவுத்துறை பணியாளர்கள் உடனிருந்தனர்.

கள்ளக்குறிச்சி

இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இலங்கை அகதிகளுக்கான 77 குடும்ப அட்டைகள் உள்பட மொத்தம் 4 லட்சத்து 32 ஆயிரத்து 65 குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்த பரிசு தொகுப்பு அந்தந்த பகுதி ரேஷன் கடைகள் மூலம் வினியோகம் செய்யப்பட உள்ளது.

இதையடுத்து கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் குடும்ப அட்டை தாரர்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யும் பணி நேற்று தொடங்கியது. இதில் அந்தந்த பகுதி ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன்களை வினியோகம் செய்தனர்.


Next Story