வாரச்சந்தையில் தக்காளிகிலோ ரூ.15-க்கு விற்பனை


வாரச்சந்தையில் தக்காளிகிலோ ரூ.15-க்கு விற்பனை
x

அன்னவாசல் அருகே முக்கண்ணாமலைப்பட்டி வாரச்சந்தையில் தக்காளி கிலோ ரூ.15-க்கு விற்பனையானது.

புதுக்கோட்டை

தக்காளி

அசைவம், சைவம் என அனைத்து வகை சமையலிலும் இடம்பிடித்தது தக்காளி. இந்த, செக்க சிவந்த தக்காளி சேராமல் எந்த சமையலும் ருசிப்பதில்லை. இதனால் குளிர்சாதன பெட்டியில் தக்காளி குறையாமல் இருக்குமாறு பெண்கள் பார்த்து கொள்வார்கள். இத்தகைய தக்காளியின் பெயரை கேட்டாலே பெண்கள் அச்சப்படும் நிலை கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஏற்பட்டது.

பருவமழை பொய்த்து போனதால் காய்கறிகளின் உற்பத்தி குறைந்தது. இதனால் அனைத்து வகை காய்கறிகளின் விலையும் கடுமையாக உயர்ந்தது. குறிப்பாக தக்காளி, சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்தது. இதில் ஒரு கிலோ இஞ்சி ரூ.400-க்கும், பூண்டு கிலோ ரூ.250-க்கும் விற்றது.

விலை உயர்வு

இஞ்சி, பூண்டு ஆகியவற்றை பொறுத்தவரை சமையலில் மிகவும் குறைந்த அளவே சேர்க்கப்படும். சைவ சமையலுக்கு பெரும்பாலும் இஞ்சியை பயன்படுத்துவது இல்லை. எனவே இஞ்சி, பூண்டு ஆகியவற்றின் விலை உயர்வு பெரிதும் மக்களை பாதிக்கவில்லை. ஆனால் சமையலில் தினமும் அதிக அளவில் சேர்க்கப்படும் தக்காளி கிலோ ரூ.120-க்கும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.140-க்கும் விற்றது.

தக்காளி விலையை கேட்டு வியந்த பலர் அதை குறைவாக வாங்க தொடங்கினர். ஒருசிலர் தக்காளிக்கு பதிலாக சமையலில் புளியை சேர்க்க தொடங்கினர். கடந்த ஜூன் மாதம் உயர தொடங்கிய தக்காளி விலை ஜூலை மாதத்தின் இறுதி வரை ரூ.120-க்கு விற்றது.

பலமடங்கு சரிவு

இதற்கிடையே வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் தக்காளி வரத்தொடங்கியது. இதனால் கடந்த ஆகஸ்டு மாதத்தின் தொடக்கத்தில் இருந்து தக்காளி விலை குறைய தொடங்கியது. மேலும் தக்காளி விலை உயர்வால் தமிழக விவசாயிகளும் தக்காளி சாகுபடியில் இறங்கினர். இதையடுத்து தக்காளி வரத்து அதிகரித்து விலை சரியத்தொடங்கியது.

அதன்படி அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டி வாரச்சந்தையில் கடந்த வாரம் கிலோ ரூ.60-க்கு விற்ற தக்காளி நேற்று ரூ.15 முதல் ரூ.20 வரை விற்கப்பட்டது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கிலோ ரூ.120-க்கு விற்ற தக்காளி விலை பல மடங்கு சரிந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சரக்கு வாகனங்களிலும் தெருத்தெருவாக தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

புதுக்கோட்டையில் தக்காளி கிலோ ரூ.20

தக்காளி விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.150-ஐ தாண்டியும் விற்பனையானது. அதன்பின் வரத்து அதிகரித்ததால் விலை படிப்படியாக குறைய ஆரம்பித்தது. அந்த வகையில் பெருமளவு விலை குறைந்து பழைய விலைக்கே தக்காளி விற்பனையாகிறது. புதுக்கோட்டை உழவர் சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.20-க்கு நேற்று விற்பனையானது. இதேபோல வெளிமார்க்கெட்டிலும் தக்காளி குறைந்த விலைக்கு விற்றது. தக்காளி விலை பழைய நிலைக்கு வந்ததால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காய்கறிகள் விலை விவரம்

புதுக்கோட்டை உழவர் சந்தையில் விற்பனையான காய்கறிகளில் சிலவற்றின் விலை விவரம் கிலோ கணக்கில் வருமாறு:- கத்தரிக்காய் ரூ.50-க்கும், வெண்டைக்காய் ரூ.25-க்கும், புடலங்காய் ரூ.30-க்கும், பாகற்காய் ரூ.40-க்கும், முள்ளங்கி ரூ.25-க்கும், முருங்கைக்காய் ரூ.25-க்கும், கேரட் ரூ.60-க்கும், பீட்ரூட் ரூ.30-க்கும், பீன்ஸ் ரூ.60-க்கும், முட்டைக்கோஸ் ரூ.30-க்கும், சின்னவெங்காயம் ரூ.50-க்கும், பெரிய வெங்காயம் ரூ.40-க்கும், அவரைக்காய் ரூ.70-க்கும், உருளைகிழங்கு ரூ.30-க்கும் விற்றது.


Next Story