மக்காச்சோளம்-பருத்தி பயிர்களுக்கு காப்பீடு செய்ய நாளை கடைசி நாளாகும்


மக்காச்சோளம்-பருத்தி பயிர்களுக்கு காப்பீடு செய்ய நாளை கடைசி நாளாகும்
x

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் மக்காச்சோளம்-பருத்தி பயிர்களுக்கு காப்பீடு செய்ய நாளை கடைசி நாளாகும்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் ராபி சிறப்பு பருவத்தில் சாகுபடி செய்யப்படும் நெல் (சம்பா), மக்காச்சோளம், பருத்தி மற்றும் சின்ன வெங்காயம் ஆகிய பயிர்களுக்கு எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்க செய்து, அவர்களை விவசாயத்தில் நிலைபெற செய்யவும் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் மத்திய அரசின் புதிய வழி காட்டுதலின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நெல் (சம்பா) பயிருக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந்தேதிக்குள்ளும், மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிருக்கு நாளை (சனிக்கிழமை) காப்பீடு செய்ய வேண்டுமென நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் அனைத்து விவசாயிகளும் உரிய காலத்தில் பயிர் காப்பீடு செய்து மகசூல் இழப்பு ஏற்படும் பட்சத்தில் பயிர் காப்பீட்டுத்தொகையை பெற்று பயன்பெறலாம். நெல் (சம்பா) பயிருக்கு காப்பீடு செய்வதற்கான பிரீமியம் தொகை ஏக்கருக்கு ரூ.564-ம், மக்காச்சோளம் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.311-ம் மற்றும் பருத்திக்கு ஏக்கருக்கு ரூ.532 ஆகும். சின்னவெங்காயம் பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி நாள் அடுத்த மாதம் 30-ந்தேதி ஆகும். அதற்கான பிரீமியம் தொகை ஏக்கருக்கு ரூ.2,075 ஆகும். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களும் நெல் (சம்பா), மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிருக்கு இத்திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் அனைவரும் நடப்பில் உள்ள சேமிப்பு கணக்கு புத்தகம் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், நில உரிமை பட்டா, நடப்பு பருவ அடங்கல் ஆகிய ஆவணங்களுடன் அருகே உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக உரிய பிரீமியத்தொகையை செலுத்தி பயிர் காப்பீடு செய்யலாம். விவசாயிகள் பொது சேவை மையங்களில் பயிர் காப்பீடு செய்திட கட்டணம் செலுத்த தேவையில்லை. பயிர் காப்பீடு தொடர்பான மேலும் விவரங்களுக்கும், சந்தேகங்கள் மற்றும் புகார்களை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை 8825631615 (பெரம்பலூர்), 9443026769 (ஆலத்தூர்), 9442534865 (வேப்பூர்), 9443826568 (வேப்பந்தட்டை) ஆகியோரை செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.


Next Story