குமரியில் அலைமோதிய சுற்றுலா பயணிகளின் கூட்டம்...!


குமரியில் அலைமோதிய சுற்றுலா பயணிகளின் கூட்டம்...!
x

உலக புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான குமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

கன்னியாகுமரி


உலக புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான குமரியில் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். மேலும் ஏப்ரல், மே கோடை விடுமுறை சீசன் காலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குமரிக்கு வருவார்கள்.

இன்று விடுமுறை தினம் என்பதால் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். குமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் இன்ற அதிகாலையில் சூரிய உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். குமரி கடலில் அதிகாலையில் சூரிய உதயமான காட்சி மேகமூட்டம் காரணமாக தெளிவாக தெரியவில்லை.

பின்னர் முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். அதனைத்தொடர்ந்து பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் குமரி கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட காலை 7 மணியிலிருந்து சுற்றுலா பயணிகள் படகு துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு திரும்பினர்.

கடந்த ஒரு வாரமாக படகு போக்குவரத்து கடல் நீர் மட்டம் தாழ்வாக காணப்பட்டதால் தாமதமாக தொடங்கியது. இன்று சரியாக 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.

குமரியில் உள்ள சுற்றுலாத்தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள தமிழன்னை பூங்கா, சன்செட் பாயிண்ட், அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா உட்பட அனைத்து இடங்களிலும் காலையிலிருந்து சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் கடற்கரையில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.


Next Story