புதிய கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தை சுற்றுலா வாகன டிரைவர்கள் முற்றுகை-ஊட்டியில் பரபரப்பு


புதிய கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி  வட்டார போக்குவரத்து அலுவலகத்தை சுற்றுலா வாகன டிரைவர்கள் முற்றுகை-ஊட்டியில் பரபரப்பு
x
தினத்தந்தி 2 May 2023 6:45 PM GMT (Updated: 2 May 2023 6:46 PM GMT)

புதிய கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி ஊட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை, சுற்றுலா வாகன டிரைவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி

ஊட்டி

புதிய கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி ஊட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை, சுற்றுலா வாகன டிரைவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வட்டார போக்குவரத்து அலுவலகம் முற்றுகை

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சுமார் நகரில், சுமார் 200-க்கும் மேக்சி கேப் வாகனங்கள் இயங்கி வருகிறது. இந்த மேக்ஸிகேப் வாகனங்களில் 12 முதல் 17 பேர் வரை பயணம் செய்யலாம்.

இந்த மேக்ஸி கேப் வாகனங்கள் சுற்றுலா பயணிகள் தங்கும் இடத்திற்கு சென்று சுற்றுலா பயணிகளை அழைத்துக் கொண்டு காலை முதல் மாலை வரை ஒரே நாளில் முக்கியமான சுற்றுலா தலங்களையும் காண்பித்து வருவது வழக்கம் ஆகும்.

இந்தநிலையில் தற்போது ஊட்டியில் கோடை சீசன் தொடங்கி உள்ளதால் மேக்ஸி கேப் வாகனங்கள் நகரில் இயக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

அதில் 25 வாகனங்கள் மட்டுமே நகரில் இயக்க வேண்டும் முக்கிய சுற்றுலா தளங்களுக்கு மேக்சிகேப் வாகனங்கள் செல்லவும், ஊட்டி நகருக்குள் வாகனங்கள் நிறுத்த தடை என பல்வேறு கட்டுப்பாடுகள் மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிருப்தி அடைந்த வாகன டிரைவர்கள் சுமார் 200 பேர், புதிய கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரி ஊட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன் தங்களது வாகனங்களை நிறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு

இதுகுறித்து மேக்சி கேப் வாகன ஓட்டுனர் சங்கத் தலைவர் ஸ்ரீகாந்த் கூறுகையில், ஊட்டியில் கோடை சீசன் தெடங்கியுள்ள நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு மேக்சி கேப் வாகனங்களுக்கு பாஸ் வழங்க மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வந்த நிலையில் இதுவரை பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் எங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிப்படைந்து உள்ளது.

இதனால் வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டோம். மேலும் குன்னூரில் இருந்து வரும் போது லல்டேல் சந்திப்பு பைகாராவில் இருந்து வரும்போது தலைக்குந்தாவுக்கு பின்னர் எங்களது வாகனங்களை இயக்க அனுமதி அளிக்க வேண்டும்.

இது குறித்த தகவல்களில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி தியாகராஜன் அலுவலகத்திற்கு நேரில் வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் மேக்ஸ் கேப் வாகன டிரைவர்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து ஊட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் கூறுகையில், முதலில் 25 வாகனங்களுக்கு பாஸ் வழங்கப்பட்ட நிலையில் தற்போது டிரைவர்களின் கோரிக்கையை ஏற்று 50 வாகனங்களுக்கு பாஸ் வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் போக்குவரத்து நெரிசல் இல்லாத நேரத்தில் நகர் பகுதிக்குள் வாகனங்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றார்.


Next Story