தொடர் விடுமுறை எதிெராலி; கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்


தினத்தந்தி 22 Oct 2023 9:30 PM GMT (Updated: 22 Oct 2023 9:31 PM GMT)

தொடர் விடுமுறை எதிெராலியாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர்.

திண்டுக்கல்

ஆயுதபூஜை, விஜயதசமி மற்றும் வார விடுமுறை என தொடர் விடுமுறையையொட்டி கொடைக்கானலுக்கு கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளது. குறிப்பாக கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்தனர். இந்தநிலையில் நேற்று ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர். ஒரேநேரத்தில் கார், வேன், பஸ் என வாகனங்கள் அணிவகுத்து வந்ததால் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருப்பினும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

இதற்கிடையே கொடைக்கானல் வந்த சுற்றுலா பயணிகள், மோயர் பாயிண்ட், குணாகுகை, பில்லர்ராக், பைன்மரக்காடு உள்ளிட்ட சுற்றுலா இடங்களையும், பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்காவிலும் குவிந்தனர். சுற்றுலா இடங்களில் நிலவிய இயற்கை காட்சிகளை பார்த்து ரசித்தனர். மேலும் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் சைக்கிள் சவாரி, குதிரை சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர். இதுதவிர கொடைக்கானலில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் அருவி, பியர்சோழா அருவி, தேவதை அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அதனை பார்த்து குதூகலித்த சுற்றுலா பயணிகள், தங்களது செல்போன் மற்றும் கேமராக்களில் புகைப்படம் எடுத்த மகிழ்ந்தனர்.


Next Story