கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்


கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 22 Oct 2023 6:45 PM GMT (Updated: 22 Oct 2023 6:47 PM GMT)

தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

கன்னியாகுமரி


உலக புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள்.

இந்தநிலையில் தற்போது சனி, ஞாயிறு வாரவிடுமுறை, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி என 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

அவ்வாறு வந்த சுற்றுலா பயணிகள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் அதிகாலையில் சூரிய உதயமாகும்காட்சியை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

மழை மற்றும் மேகமூட்டம் காரணமாக சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரியவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். அதனைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி, பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட படகு துறையில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர். அதன் பின்னர் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை கண்டு களித்தனர்.

இதேபோல விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அலைமோதியது.

கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், சுற்றுலா பாதுகாவலர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.


Next Story