கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர் படகில் பயணம் செய்ய ஆர்வம்


கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர் படகில் பயணம் செய்ய ஆர்வம்
x
தினத்தந்தி 18 Jun 2023 7:15 PM GMT (Updated: 18 Jun 2023 7:16 PM GMT)

ஞாயிறு விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். உல்லாச படகில் உற்சாகத்துடன் சவாரி செய்து மகிழ்ந்தனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி:

ஞாயிறு விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். உல்லாச படகில் உற்சாகத்துடன் சவாரி செய்து மகிழ்ந்தனர்.

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

உலக புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அதிகாலையிலேயே சுற்றுலா பயணிகள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் குவிந்தனர். அவர்கள் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசித்தனர். பலர் தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்தனர்.

படகு போக்குவரத்து தாமதம்

அதைத்தொடர்ந்து அவர்கள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட படகு துறையில் நீண்டநேரம் காத்திருந்தனர்.

அப்போது, திடீரென கடல் நீர்மட்டம் தாழ்ந்தது. காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கவில்லை. பின்னர், 9.30 மணிக்கு கடல் நீர்மட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து படகு போக்குவரத்து தொடங்கியது. அதனைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகில் சென்றனர்.

இதேேபால் கன்னியாகுமரி-வட்டக்கோட்டை உல்லாச படகிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் பயணம் செய்தனர். அப்போது, படகில் சென்றவர்கள் திருவள்ளுவர், விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் இருந்தவாறு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

தீவிர கண்காணிப்பு

இதேபோல், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை, அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து இடங்களிலும் நேற்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், சுற்றுலா பாதுகாவலர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.


Next Story