தனியார் ரெயில்சேவையை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மதுரை ரெயில் நிலையம் முன்பு தனியார் ரெயில்சேவையை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மத்திய அரசு, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரெயில்வே துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு ரெயில்வே தொழிற்சங்கங்கள் மட்டுமின்றி, மத்திய அரசு பணியாளர்கள் சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தற்போது மதுரையில் இருந்து காசிக்கு ரெயில்வேயின் துணை நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் சுற்றுலா ரெயில் இயக்கப்படுகிறது. இதனை கண்டித்து டி.ஆர்.இ.யூ. தொழிற்சங்கம் தரப்பில் நேற்று மதுரை ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கோட்ட பொருளாளர் சரவணன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் தெய்வராஜ் முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கணேசன், டி.ஆர்.இ.யூ. துணை பொது செயலாளர் சிவக்குமார், இணை செயலாளர் சங்கரநாராயணன் ஆகியோர் மத்திய அரசை கண்டித்தும், ரெயில்வே துறையின் நடவடிக்கைகளை கண்டித்தும் பேசினர். இதில், மதுரை கோட்டத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில், உதவி தலைவர் ஜெயராஜ சேகர் நன்றி கூறினார