மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு


மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 28 Sep 2023 7:00 PM GMT (Updated: 28 Sep 2023 7:00 PM GMT)

பலத்த மழையால் கூடலூர்-கேரள சாலையில் மரம் விழுந்து 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி

கூடலூர்

பலத்த மழையால் கூடலூர்-கேரள சாலையில் மரம் விழுந்து 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மரம் விழுந்தது

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் காலை முதல் மதியம் வரை வெயில் அடிக்கிறது. பின்னர் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மின் வினியோகம் அடிக்கடி பாதிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கூடலூர் பகுதியில் பலத்த மழை பெய்தது.

இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த மழையால் நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதற்கிடையே நேற்று அதிகாலை 3 மணிக்கு கூடலூரில் இருந்து கேரள மாநிலம் சுல்தான்பத்தேரிக்கு செல்லும் சாலையில் உள்ள தேவர்சோலை 8-ம் மைல் பகுதியில் சாலையோரம் நின்றிருந்த மரம் முறிந்து விழுந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

மேலும் கேரள மாநிலம் வயநாட்டில் இருந்து கூடலூர் நோக்கி வந்த அரசு பஸ்கள், சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதேபோல் கூடலூரில் இருந்து சென்ற வாகனங்களும் நீண்ட வரிசையில் நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் நிலைய அலுவலர் மார்ட்டின் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

தொடர்ந்து சாலையில் விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாலை 4.30 மணிக்கு மரம் அகற்றப்பட்டு, வாகன போக்குவரத்து தொடங்கியது. இதன் காரணமாக 1½ மணி நேரம் தாமதமாக வாகனங்கள் வெளியூர்களுக்கு புறப்பட்டு சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.


Next Story