3 இடங்களில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு


3 இடங்களில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 22 July 2023 8:15 PM GMT (Updated: 22 July 2023 8:15 PM GMT)

நீலகிரியில் சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு 3 இடங்களில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி

ஊட்டி

நீலகிரியில் சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு 3 இடங்களில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சூறாவளி காற்றுடன் மழை

தென்மேற்கு பருவமழை நீலகிரி மாவட்டத்தில் இதுவரை தீவிரம் அடையவில்லை. ஆனாலும் ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, குந்தா, பந்தலூர் உள்ளிட்ட இடங்களில் சூறாவளி காற்றுடன் லேசான மழை பெய்து வருகிறது. மேலும் மண்ணில் ஈரத்தன்மை அதிகரித்து ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்து வருகின்றன. நேற்று முன்தினம் மட்டும் 10 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

இந்த நிலையில் நேற்று 3 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது. ஊட்டியில் இருந்து குருத்துக்குளி செல்லும் சாலையில் தீட்டுக்கல் என்ற இடத்தில் சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடும் குளிர்

மேலும் ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில் காமராஜர் சாகர் அணை அருகில் சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தவிர அய்யன்கொல்லியில் இருந்து பாட்டவயல் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த சாலைகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றன. இதை அறிந்த தீயணைப்பு வீரர்கள் 3 குழுக்களாக பிரிந்து சென்று, மரங்களை வெட்டி அகற்றினர். அதன்பின்னரே போக்குவரத்து சீரானது. மேலும் கடும் குளிர் நிலவி வருவதால், பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.


Related Tags :
Next Story