ஆம்னி பஸ்களால் போக்குவரத்து நெரிசல்
கம்பத்தில் ஆம்னி பஸ்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
தேனி மாவட்டம் கம்பம், கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ளதால் நகரின் முக்கிய சாலையான தேனி-குமுளி நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த சாலையில் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் பொருட்டு அரசு பஸ்கள் புதிய பஸ்நிலையம் சென்று வருவதற்கு ஒருவழி பாதை அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதும் நெருக்கடி குறையவில்லை. காரணம் மாலை நேரங்களில் சென்னை, பெங்களூரு, கோவை செல்லக்கூடிய தனியார் ஆம்னி பஸ்களை தேனி-குமுளி சாலையில் காந்தி சிலையில் இருந்து பத்திரபதிவு அலுவலகம் வரை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றனர். இதனால் கம்பம் பகுதியில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்கும் பொருட்டு கம்பத்தில் ஆம்னி பஸ் நிறுத்துவதற்கு பஸ் நிலையம் அமைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.