படிக்கட்டில் பயணம் செய்தபோது விபரீதம்: பஸ்சில் இருந்து தவறி விழுந்தவர் சாவு


படிக்கட்டில் பயணம் செய்தபோது விபரீதம்: பஸ்சில் இருந்து தவறி விழுந்தவர் சாவு
x

திருத்தணி அருகே பஸ் படிக்கட்டில் பயணம் செய்தபோது தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

திருவள்ளூர்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் உப்புகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி (வயது 58). இவர் அரக்கோணம் - திருத்தணி சாலையில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த சில ஆண்டுகளாக பழனி திருத்தணி சித்தூர் சாலையில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 14-ந் தேதி வழக்கம்போல் அரக்கோணத்திற்கு வேலைக்கு சென்ற பழனி, இரவு வீடு திரும்புவதற்காக காஞ்சீபுரத்தில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற அரசு பஸ்சில் பயணம் செய்தார்.

கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர் படிக்கட்டில் பயணம் செய்ததாக தெரிகிறது. திருத்தணி மா.பொ.சி சாலை வளைவில் பஸ் திரும்பும்போது படிக்கட்டில் பயணம் செய்த பழனி எதிர்பாராத விதமாக திடீரென சாலையில் தவறி கீழே விழுந்தார்.

இதில் தலையில் படுகாயம் அடைந்த பழனியை சக பயணிகள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பழனி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்த பழனிக்கு மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story