வங்கி துணை மேலாளர் பணிக்கான தேர்வுக்கு பயிற்சி


வங்கி துணை மேலாளர் பணிக்கான தேர்வுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 25 Sep 2023 7:37 PM GMT (Updated: 26 Sep 2023 10:50 AM GMT)

வங்கி துணை மேலாளர் பணிக்கான தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

பெரம்பலூர்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்று துணை மேலாளர் பணிக்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி அந்த வங்கியில் துணை மேலாளருக்கான 2 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் 21 வயது முதல் 35 வரை உள்ள ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரை சேர்ந்த பட்டதாரிகள் நாளைக்குள் (புதன்கிழமை) bank.sbi/careers/current-openings என்ற இணையதளத்தில் வழியாக விண்ணப்பிக்கலாம்.

இத்தேர்வுக்கும் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு முறையானது முதற்கட்ட தேர்வு, முதன்மை நேர்காணல் மற்றும் குழு பயிற்சிகள் என 3 நிலைகளில் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்வானது வருகிற நவம்பர் மாதத்திலும், முதன்மை தேர்வானது வருகிற டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பதவிக்கான ஆரம்ப கால மாத ஊதியம் ரூ.41 ஆயிரத்து 960 ஆகும். வங்கி துணை மேலாளர் பதவிக்கான தேர்வில் வெற்றி பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பட்டதாரிகளுக்கு ஒரு பயிற்சி நிலையத்தின் மூலம் இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சியை பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இப்பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ மூலமாக ஏற்கப்படும், என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.


Next Story