தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி-அதிகாரிகள் ஆய்வு


தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி-அதிகாரிகள் ஆய்வு
x

வேட்டமங்கலத்தில் தீயணைப்பு வீரர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கரூர்

தீயணைப்பு வீரர்கள் தேர்வு

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 1,204 புதிய தீயணைப்பு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு தாம்பரம் மாநில பயிற்சி மையம் மற்றும் 8 தற்காலிக பயிற்சி மையங்களில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த 8 பயிற்சி மையங்களில் ஒன்றான நொய்யல் வேட்டமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு துறை வீரர்களுக்கான தற்காலிக பயிற்சி மையம் தொடங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

பயிற்சி

இந்த பயிற்சி மையத்தில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 140 தீயணைப்பு வீரர்களுக்கு 90 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. முகாமில் கரூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அலுவலர் ஜெகதீஷ் தலைமையில் உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர்கள் சந்திரகுமார் (கரூர்), துரை (நாகப்பட்டினம்), வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் மற்றும் 5 தீயணைப்பு நிலைய அலுவலர்கள், 10 முன்னணி தீயணைப்பு வீரர்கள், 10 தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் தீயணைப்பு வீரர்களுக்கு தீயணைத்தல், மீட்புப்பணிகள், விபத்துக்களில் இருந்து மீட்டல், நீச்சல் பயிற்சி, மலையேற்றம் பயிற்சி, யோகா, தீயணைப்பு கருவிகளை இயக்குதல் நீர் விடு குழாய் பயிற்சி, உடற்பயிற்சி, தடை தாண்டும் பயிற்சி, ஏணி ஏறுதல், கயிறு ஏறுதல் உள்பட பல்வேறு வகையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

அணிவகுப்பு மரியாதை

இப்பயிற்சி மையத்தில் அளிக்கப்படும் பயிற்சிகளை தீயணைப்பு துறை இயக்குனர் பி.கே.ரவி, மத்திய மண்டல தீயணைப்பு துறை இணை இயக்குனர் சரவணகுமார் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது தீயணைப்பு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். அதனைத்தொடர்ந்து தடை தாண்டுதல் பயிற்சி, பயிற்சி வகுப்புகள், தீயணைப்பு வீரர்களுக்கு வழங்கப்படும் சாப்பாடு, சமையலறை மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் ஜெகதீஷ், மாவட்ட தீயணைப்பு துறை உதவி அலுவலர்கள் மற்றும் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் மற்றும் பயிற்சியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story