பனைமரங்கள் வெட்டுவதை தடுக்க விரைவில் சட்டம்


பனைமரங்கள் வெட்டுவதை தடுக்க விரைவில் சட்டம்
x

தமிழகத்தில் பனைமரங்கள் வெட்டுவதை தடுக்க இந்த ஆண்டுக்குள் சட்டம் இயற்றப்படும் என்று ராமநாதபுரத்தில் பனைவாரிய தலைவர் உறுதி கூறினார்.

ராமநாதபுரம்


தமிழகத்தில் பனைமரங்கள் வெட்டுவதை தடுக்க இந்த ஆண்டுக்குள் சட்டம் இயற்றப்படும் என்று ராமநாதபுரத்தில் பனைவாரிய தலைவர் உறுதி கூறினார்.

பேட்டி

ராமநாதபுரத்தில் தமிழக பனை வாரிய நல தலைவரும் நாடார் பேரவை நிறுவனருமான எர்ணாவூர் நாராயணன் கூறியதாவது:- தமிழக முதல்-அமைச்சர் மாநிலம் முழுவதும் உள்ள பனை தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும்.

அவர்கள் அனைவரையும் நலவாரியத்தில் சேர்த்து பயனடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளார். அவரின் ஆணைக்கிணங்க மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நலத்திட்ட உதவிகளை செய்து உறுப்பினர்களாக சேர்த்து வருகிறோம்.

ஈரோட்டில் 400 பனை தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய அட்டையும், மாணவர்களுக்கு கல்வி உதவியும் வழங்கப்பட்டது. பனை தொழிலாளர்களுக்கு அரசின் திட்டங்களை முழுமையாக கிடைக்கச்செய்ய வேண்டும் என்பதுதான் எங்களின் லட்சியம். பனை மரங்கள் வெட்டுவதை தடைசெய்ய இன்னும் சட்டம் இயற்றப்படவில்லை. வாய்மொழி உத்தரவாக கலெக்டர் அனுமதியின்றி பனை மரங்கள் வெட்டக்கூடாது என்றுதான் கூறப்பட்டுள்ளது.

நடவடிக்கை

இதனால் காவல்துறையினர் சட்டம் இயற்றாமல் நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறுகின்றனர். எனவே சட்டம் இயற்ற வேண்டியது அவசியமாகிறது. இதுதொடர்பாக முதல்-அமைச்சரை சந்தித்து வலியுறுத்தி இந்த ஆண்டுக்குள் அதற்கான சட்டத்தை இயற்றுவதற்கு வழிவகை செய்யப்படும். மாநிலம் முழுவதும் நலவாரியத்தில் பதிவை புதுப்பிக்காதவர்களையும், புதிய உறுப்பினர்களையும் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தற்போதைய நிலவரப்படி3 ஆயிரம் பேரை கூடுதலாக உறுப்பினர்களாக சேர்த்துள்ளோம். ஒரு லட்சம் பேரை உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு வைத்து சுற்றுப்பயணம் செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story