பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்


பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்
x

பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம்

கல்வி உதவித்தொகை

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2022-2023-ம் கல்வியாண்டில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மாணவர்களுக்கு ப்ரி மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் ஆதார் எண் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்க இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன.

சிறப்பு முகாம்கள்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற ஏதுவாக, அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் வங்கியுடன் இணைந்து அந்தந்த பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்க சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி மாணவர்கள் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறுமாறும் கேட்டு கொள்ளப்படுகிறது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 7,899 மாணவர்களுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாமல் இருந்ததாகவும், கடந்த 10 நாட்களாக பள்ளிகளில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் மூலம் 1,427 மாணவர்களுக்கு இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 ஆயிரத்து 472 மாணவர்களுக்கு வரும் 25-ந் தேதிக்குள் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்கப்பட வேண்டும்.

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அஞ்சலக ஊழியர்கள் பள்ளிகளில் முகாம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும். அஞ்சலக வங்கி கணக்கு தொடங்கும் பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் பெற்றோர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story