போக்குவரத்து தொழிற்சங்கங்களுடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி


போக்குவரத்து தொழிற்சங்கங்களுடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி
x
கோப்புப்படம் 
தினத்தந்தி 7 Feb 2024 12:02 PM GMT (Updated: 7 Feb 2024 12:12 PM GMT)

அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வரும் 21-ந்தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

பதினைந்தாவது ஊதிய ஒப்பந்தம், ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில், பேச்சுவார்த்தை மூலம் சுமுக முடிவை எடுத்துக் கொள்ளுமாறு, போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு கோர்ட்டு அறிவுறுத்தி இருந்தது.

இதைத்தொடர்ந்து 2 கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், 3-ம் கட்ட பேச்சுவார்த்தை சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் தொழிலாளர் நல இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சி.ஐ.டி.யூ., அண்ணா தொழிற்சங்கம், ஏ.ஐ.டி.யூ.சி. உள்பட 27 தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர்கள் பங்கேற்றனர்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. தொடர்ந்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வரும் 21-ந்தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்தரராஜன், இன்றைய பேச்சுவார்த்தையில் ஓய்வூதியதாரர்கள் பிரச்சினை குறித்து பேசப்பட்டதாகவும், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடர்பாக குழு அமைக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது என்றும் கூறினார்.


Next Story