கிரீன்வேஸ் சாலை-அடையாறு இடையே ஆற்றின் கீழ் சுரங்கம் தோண்டும் பணி விரைவில் தொடங்கும் - மெட்ரோ நிறுவனம்


கிரீன்வேஸ் சாலை-அடையாறு இடையே ஆற்றின் கீழ் சுரங்கம் தோண்டும் பணி விரைவில் தொடங்கும் - மெட்ரோ நிறுவனம்
x

கிரீன்வேஸ் சாலை-அடையாறு இடையே அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கம் தோண்டும் பணிக்காக எந்திரம் பொருத்தும் பணி நிறைவடைந்தது. 15-ந் தேதிக்குள் சுரங்கம் தோண்டும் பணியை தொடங்க மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

சென்னை

மெட்ரோ ரெயில் பாதை

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 2 வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 2-வது கட்டமாக ரூ.61 ஆயிரத்து 843 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பாதை மற்றும் ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்த திட்டத்தில் மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26.1 கிலோ மீட்டர், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர், மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை 48 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த வழித்தடங்களில் 128 ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதில் கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வழித்தடத்தில் 30, மாதவரம்-சோழிங்கநல்லூர் இடையே 48, மாதவரம்-சிறுசேரி சிப்காட் இடையே 50 ரெயில் நிலையங்களும் அமைய உள்ளன.

சுரங்கம் தோண்டும் எந்திரம் தயார்

இந்த திட்டப்பணிகளை நிறைவேற்ற கட்டுமான நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்துக்கான பணிகளில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள பூங்காவில் மெட்ரோ ரெயிலுக்கான சுரங்க ரெயில் நிலையம் சுமார் 70 அடி ஆழத்தில் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

சுரங்கம் தோண்டும் எந்திரம் மூலம் (டணல் போரிங் எந்திரம்) கிரீன்வேஸ் சாலையில் இருந்து அடையாறு ஆற்றை கடந்து அடையாறு பணிமனை நோக்கி சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இதற்காக கிரீன்வேஸ் சாலையில் உள்ள பூங்காவில் 70 அடி ஆழத்தில் 2 சுரங்கம் தோண்டும் எந்திரம் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது. சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையம் அருகில் கூவத்தின் கீழ் சுரங்க ரெயில் நிலையம் அமைத்தது போன்று அடையாறு ஆற்றின் கீழ் சுரங்க ரெயில் பாதை அமைக்கப்படுகிறது.

பிப்ரவரியில் பணிகள் தொடக்கம்

கிரீன்வேஸ் சாலையில் உள்ள பூங்காவில் அமைக்கப்படும் மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்கும் பணிக்காக 300 மீட்டர் நீளத்துக்கு ரெயில் நிலைய சுற்றுச்சுவர் கட்டப்பட்டு உள்ளது. தற்போது பொருத்தப்பட்டு உள்ள சுரங்கம் தோண்டும் எந்திரம் கிரீன்வேஸ் சாலையில் இருந்து அடையாறு நோக்கி செல்லும் இந்த பாதையில் அடையாறு ஆற்றை கடந்து செல்ல வேண்டி உள்ளது.

இதற்காக அடையாறு ஆற்றில் 40 மீட்டர் ஆழத்துக்கு துளைகள் போடப்பட்டு வெற்றிகரமாக மண் பரிசோதனை செய்து, மண்ணின் உறுதி தன்மை அறியப்பட்டுள்ளது. வருகிற பிப்ரவரி 15-ந் தேதிக்கு முன்பாக சுரங்கம் தோண்டும் பணி தொடங்க இருக்கிறது.

தற்போது அடையாறு ஆற்றில் சுமார் 6 மீட்டர் உயரத்தில் தண்ணீர் ஓடுகிறது என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.


Next Story