சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 25 பேர் காயம்


அன்னவாசல் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 25 பேர் காயமடைந்தனர்.

புதுக்கோட்டை

அன்னவாசல்,

ஜல்லிக்கட்டு

அன்னவாசல் அருகே உள்ள மதியநல்லூர் அடைக்கலம்காத்தார் முனியப்பச்சி சாமி கோவிலின் திருவிழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதையொட்டி கோவில் திடலில் வாடிவாசல் அமைக்கப்பட்டு தடுப்பு கட்டைகள் போடப்பட்டிருந்தன. காலையில் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டன. பின்னர் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

விழாவிற்கு ஒன்றியக்குழு தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். இதையடுத்து, ஜல்லிக்கட்டை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. மற்றும் ஆர்.டி.ஓ. குழந்தைசாமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

சீறிப்பாய்ந்த காளைகள்

முதலில் வாடிவாசலில் இருந்து கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதை யாரும் பிடிக்கவில்லை. அதன்பின் ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்த காளைகளில் பல காளைகள் மின்னல் வேகத்தில் சென்றன. சில காளைகள் களத்தில் நின்று தன்னை அடக்க வந்த வீரர்களை அருகில் நெருங்க விடாமல் மிரட்டின. ஆவேசத்துடன் பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

இந்த ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை, விராலிமலை, கீரனூர், இலுப்பூர், அன்னவாசல், திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 800 காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்தன. இதில் 220 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டு காளைகளை அடக்கினர்.

25 பேர் காயம்

இப்போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், கட்டில், மின்விசிறி, குக்கர், ஹாட்பாக்ஸ், சில்வர் குடம், அண்டா, மிக்சி உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க முயன்ற வீரர்கள், பார்வையாளர்கள் என 25 பேர் காளைகள் முட்டியதில் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு ஏற்கனவே தயார்நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக 6 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஜல்லிக்கட்டை அன்னவாசல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கண்டு களித்தனர். இலுப்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு அருள்மொழி அரசு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஜல்லிக்கட்டு காளையின் கால் முறிந்தது

மதியநல்லூர் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்வதற்காக ராப்பூசல் ரெங்கராஜ் என்பவரின் ஜல்லிக்கட்டு காளை வந்தது. பின்னர் வாடிவாசலில் இருந்து துள்ளிக்குதித்து வெளியே வந்த அந்த காளை நிலைத்தடுமாறி கீழே விழுந்தது. இதில், காளையின் முன்கால் முறிந்தது. இதையடுத்து அந்த காளைக்கு புதுக்கோட்டை 1962 அம்மா ஆம்புலன்ஸ் குழுவினர் சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்கு தஞ்சாவூர் கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

பள்ளி மாணவன் படுகாயம்

மதியநல்லூர் ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிறஞ்சினையை சேர்ந்த அரசுபள்ளி மாணவர் தனுஷ் (வயது 15) மீது காளை பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த சிறுவனுக்கு மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.


Next Story