தமிழகத்தில் புதிதாக இரண்டு மீன்பிடி துறைமுகங்கள் - மத்திய இணை மந்திரி தகவல்


தமிழகத்தில் புதிதாக இரண்டு மீன்பிடி துறைமுகங்கள்  - மத்திய இணை மந்திரி தகவல்
x

தமிழகத்தில் புதிதாக இரண்டு மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்படுகின்றன என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை ராயபுரத்தில் அமைந்துள்ள மத்திய மீன்துறை கடல்சார் - பொறியியல் பயிற்சி நிலையத்தை மத்திய மீன் வளத்துணை இணை மந்திரி எல்.முருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அந்த நிறுவனத்தின் மீன் அளவை ஆராய்ச்சி கப்பலில் சென்று பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

2014 ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றது முதல் 2019 ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகளில் தூய்மை இந்தியா திட்டத்தில் முதல் கட்டத்தின்படி பள்ளிகள் மற்றும் வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டன. கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி முதல் இரண்டாவது கட்டமாக தூய்மை பாரதம் திட்டம் 2.0 நடைபெற்று வருகிறது.

இதன்படி அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேவையற்ற கோப்புகள் நீக்கப்பட்டு, துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரதமரின் விரைவுசக்தி திட்டத்தின் கீழ் மீனவள மேம்பாடு இணைக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை காசிமேடு துறைமுகம் உள்பட இந்தியாவில் ஐந்து துறைமுகங்கள் நவீனப்படுத்தப்படுகிறது.

மீன்பிடி மற்றும் மீன் வளர்ப்பு உள்கட்டமைப்பு நிதியில் தமிழகத்திற்கு மட்டும் சுமார் 1800 கோடி ருபாய் வழங்கப்பட்டுள்ளது. திருவொற்றியூரில் சூரை மீன்களுக்கென ஒரு துறைமுகம், செங்கல்பட்டு விழுப்புரம் மாவட்டம் இடையே ஒரு துறைமுகம் அமைக்கப்பட்டு வருகிறது.

விவசாயிகளை போல மீனவர்களுக்கும் கடன் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்திலும் 32 சதவீத மீன் ஏற்றுமதி நடந்துள்ளதாக தெரிவித்தார். மீன் ஏற்றுமதியில் 2 வது இடத்திலும், இறால் ஏற்றுமதியில் முதல் இடத்திலும் இந்தியா உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story