மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் போலீஸ் ஏட்டு உள்பட 2 பேர் படுகாயம்


மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் போலீஸ் ஏட்டு உள்பட 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 22 July 2023 7:07 PM GMT (Updated: 23 July 2023 12:09 PM GMT)

மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் போலீஸ் ஏட்டு உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருச்சி

மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் போலீஸ் ஏட்டு உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

போலீஸ் ஏட்டு

துறையூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் முருகானந்தம் (வயது 34). இவர் துறையூர் காவலர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார். இந்தநிலையில் முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று விட்டு மீண்டும் துறையூர் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் ஏட்டு முருகானந்தம் சென்று கொண்டிருந்தார்.

அப்போது முசிறி - துறையூர் சாலையில் கண்ணனூர் அருகே கொத்தம்பட்டி காலனி அருகே வந்தபோது மகாதேவிபுதூர் பகுதியை சேர்ந்த அன்பழகன் (57) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இந்த விபத்தில் ஏட்டு் முருகானந்தம் மற்றும் அன்பழகன் ஆகிய இருவரும் கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் முருகானந்தத்தை மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும், அன்பழகனை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லாட்டரி சீட்டுகள்விற்றவர் கைது

*காட்டுப்புத்தூரில் கடைவீதியில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக கனகராஜ் (45) என்பவரை காட்டுப்புத்தூர் போலீசார் கைது செய்தனர்.

மோட்டார் சைக்கிள் திருட்டு

*காட்டுப்புத்தூர் அருகே நாகையநல்லூரை சேர்ந்தவர் அரவிந்தன் (32). சம்பவத்தன்று இவர் காட்டுப்புத்தூரில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் மையம் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். அதனை யாரோ திருடி சென்றுவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து திருவெறும்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் மல்லிகா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியினர் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.

பேட்டரி திருடியவர் கைது

* மணப்பாறையை அடுத்த மாணிக்கம்பிள்ளை சத்திரம் பகுதியில் சிவகுமார் என்பவர் புதிதாக பெட்ரோல் விற்பனை நிலையம் அமைத்துள்ளார். ஆனால் இன்னும் திறக்கப்படவில்லை. இந்நிலையில் அங்குள்ள ஜெனரேட்டரில் இருந்த இரண்டு பேட்டரிகளை திருடியதாக மதுரை ஆணையூரை சேர்ந்த பொய்யாமொழி (63) என்பவரை மணப்பாறை போலீசார் கைது செய்தனர்.


Next Story