தனித்தனி விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலி


தனித்தனி விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 11 April 2023 6:45 PM GMT (Updated: 11 April 2023 6:45 PM GMT)

தனித்தனி விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலியானார்கள்.

விழுப்புரம்

விழுப்புரம்:

புதுச்சேரி மாநிலம் கலிதீர்த்தான்குப்பத்தை சேர்ந்தவர் ருத்ரவன்னியன் மனைவி கிரிஜா(வயது 52). இவர், தனது மகன் சுரேந்திரனுடன்(32) மோட்டார் சைக்கிளில் உளுந்தூர்பேட்டையில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்துகொண்டிருந்தார். விழுப்புரம் பெரியார் நகரில் வந்தபோது மோட்டார் சைக்கிளில் இருந்த கிரிஜா நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிரிஜா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவியின் கண்எதிரே...

திண்டிவனம் அருகே உள்ள ஓங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார்(வயது 53). இவர், தனது மகளின் பிரசவத்துக்காக மனைவி அஞ்சலையுடன் முண்டியம்பாக்கம் சென்றார். பின்னர் அங்கிருந்து கணவன், மனைவி இருவரும் பஸ்சில் ஓங்கூர் பஸ் நிறுத்தத்தில் வந்து இறங்கி சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்த கார், அய்யனார் மீது மோதியதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். தனது கண் எதிரே கணவர் துடிதுடித்து பரிதாபமாக இறந்ததை கண்டு அஞ்சலை அழுதார். இதுகுறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story