பெரியார் பல்கலைக்கழகத்தில் திறந்த மற்றும் தொலைதூர படிப்புகளில் சேர வேண்டாம் - யு.ஜி.சி. அறிவிப்பு


பெரியார் பல்கலைக்கழகத்தில் திறந்த மற்றும் தொலைதூர படிப்புகளில் சேர வேண்டாம் - யு.ஜி.சி. அறிவிப்பு
x

தமிழ்நாடு பெரியார் பல்கலைக்கழகத்தில் திறந்த மற்றும் தொலைதூர படிப்பு திட்டங்களில் சேரவேண்டாம் என்று பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.

சென்னை:

பெரியார் பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைதூர படிப்பு திட்டங்களுக்கு முறையான அங்கீகாரம் பெறவில்லை என்று கூறும் பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.), அந்த படிப்பு திட்டங்களில் சேரவேண்டாம் என்றும் எச்சரித்திருக்கிறது.


இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு செயலாளர் ராஜ்னிஷ் ஜெயின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு பெரியார் பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைதூர படிப்பு திட்டங்கள் முழு நேர இயக்குனர், போதிய ஆசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள் இல்லாமல் இயங்கி வருவதாகவும், பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமுறைகளின்படி முறையான அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வருவதாகவும் பல்கலைக்கழக மானியக்குழு அலுவலகத்துக்கு தகவல் வந்துள்ளது. அதன்படி, இதுசார்ந்த புகார் தீர்வு குழுவால் சில முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதன்படி, 2022-23 மற்றும் 2023-24-ம் கல்வியாண்டில் உயர்கல்விக்கான எந்த விண்ணபங்களும் பரிசீலிக்கப்படாது. திறந்த மற்றும் தொலைதூர கல்வித்திட்டங்களை வழங்குவதற்காக உயர்கல்வி நிறுவனத்தால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பமும் செயல்படுத்தப்படவில்லை.

இதுதொடர்பாக பெறப்பட்ட புகார்கள், விதிமீறல்கள், அதுதொடர்பாக கவனிக்கப்பட்ட விவரங்கள் கவர்னர், உயர்கல்வித்துறை செயலாளர், மாநில அரசாங்கம் உண்மை கண்டறிவதற்கும், தேவையான நடவடிக்கைகளுக்காகவும் அவர்களுக்கு அனுப்பப்படும்.

எனவே பொதுமக்கள், மாணவர்கள் தமிழ்நாடு பெரியார் பல்கலைக்கழகம் வழங்கும் திறந்த மற்றும் தொலைதூர கல்வியில் வழங்கும் எந்தவொரு திட்டத்திலும் சேரவேண்டாம். பல்கலைக்கழக மானியக்குழுவால் கல்வித்திட்டங்களுக்கு அங்கீகாரம் பெறாததால், இதுபோன்ற திட்டங்களில் சேருவது மாணவர்களின் வாழ்க்கையை பாதிக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைதூர படிப்பு திட்டங்களில் சேரவேண்டாம் என்று யு.ஜி.சி. தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story