பிரதமர் மோடியின் ஆட்சியில் மத்திய விசாரணை முகமைகள் அரசியல் ஏவலுக்கான துறையாக மாறிவிட்டன - கே.பாலகிருஷ்ணன்


பிரதமர் மோடியின் ஆட்சியில் மத்திய விசாரணை முகமைகள் அரசியல் ஏவலுக்கான துறையாக மாறிவிட்டன - கே.பாலகிருஷ்ணன்
x

முறைகேடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

பிரதமர் மோடியின் ஆட்சியில் மத்திய விசாரணை முகமைகள் அனைத்தும் அரசியல் ஏவலுக்கான துறையாக மாறிவிட்டன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"மத்திய அரசின் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் மருத்துவரை மிரட்டி மதுரையில் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். ஏற்கெனவே ரூ.3 கோடி பேரம் பேசி, ரூ.31 லட்சம் லஞ்சமாக வாங்கிய அந்த அதிகாரி, அடுத்த தவணையாக ரூ.20 லட்சம் பெறும்போது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையிடம் மாட்டிக்கொண்டுள்ளார். அதற்காக மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியுள்ளனர். இது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.

சில நாட்கள் முன்புதான் ராஜஸ்தானில் இதே போல ஒரு அமலாக்கத் துறை அதிகாரி லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக மாநில அதிகாரிகளிடம் மாட்டினார். ஏற்கெனவே, ஊழல்வாதிகளை தப்ப விடுவதற்கு சி.பி.ஐ அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது, பா.ஜ.க.வை சார்ந்த நபர்கள் மத்திய முகமைகளின் பேரால் லஞ்சம் வாங்குவது, பா.ஜ.க.வினர் வீட்டில் சோதனைக்கு சென்றுவிட்டு கட்சியினர் தலையீட்டுக்கு பணிந்து திரும்பி வருவது என அடுக்கடுக்கான முறைகேடுகளை பார்த்து வருகிறோம்.

சுயேச்சையாக செயல்பட்டுக் கொண்டிருந்த மத்திய விசாரணை முகமைகள் அனைத்தும் பிரதமர் மோடியின் ஆட்சியில் அரசியல் ஏவலுக்கான துறையாக மாறிப்போய் விட்டன. அதற்காகவே வானளாவிய அதிகாரங்கள் அந்த முகமைகளிடம் குவிக்கப்பட்டன. இப்போது, மோடி ஆட்சியின் ஊழல், முறைகேடுகளும் மத்திய முகமைகளில் ஊடுருவி மிக மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன. எனவே, இந்த முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டுமென மத்திய பா.ஜ.க. அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


Next Story