திராவிட மாடல் ஆட்சியில் இளைஞர்கள் வேலை இல்லாமல் தவிப்பு; அன்புமணி ராமதாஸ் வேதனை


திராவிட மாடல் ஆட்சியில் இளைஞர்கள் வேலை இல்லாமல் தவிப்பு; அன்புமணி ராமதாஸ் வேதனை
x

திராவிட மாடல் ஆட்சியில் ஒரு கோடியே 32 லட்சம் இளைஞர்கள் வேலை இல்லாமல் தவிப்பதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

திருவண்ணாமலை

திராவிட மாடல் ஆட்சியில் ஒரு கோடியே 32 லட்சம் இளைஞர்கள் வேலை இல்லாமல் தவிப்பதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

பா.ம.க. பொதுக்கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மாங்கால் கூட்ரோடு பகுதியில் பா.ம.க. 2.O விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு பேசியதாவது:-

தமிழகத்தில் சிப்காட் நிலம் கொடுத்த உள்ளூர் இளைஞர்களுக்கு 80 சதவீத வேலை வாய்ப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குட்கா, போதை பொருட்களை தடை செய்ய வேண்டும். இளைஞர்களின் நலன் கருதி ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் வழங்க வேண்டும். இல்லையேல் மிகப்பெரிய போராட்டத்தை பா.ம.க. கையிலெடுக்கும்.

மேலும் தற்போதைய அரசுக்கு புதிய கல்வி திட்டம், வேலை வாய்ப்பு உருவாக்குவது உள்ளிட்டவைகள் குறித்து எதுவும் தெரியாமல் இருப்பதால் தமிழகத்தில் படித்த இளைஞர்கள் 1 கோடியே 32 லட்சம் பேர் வேலையில்லாமல் தவிக்கின்றனர். இதற்கு காரணம் திராவிட மாடல் ஆட்சியே.

பா.ம.க. மாடல் ஆட்சியில் மாணவர்களின் படிப்புக்கு ஒரு பைசாகூட கட்டணம் செலுத்த தேவையில்லை. இலவச உயர்தர மருத்துவ சேவை அளிக்கப்படும்.

பா.ம.க. மாடல் ஆட்சியில் முதல் கட்டமாக ஒரு லட்சம் கோடி ரூபாயை தமிழகத்திற்கு நீர் மேலாண்மைக்கு ஒதுக்கி தமிழகத்தில் அனைத்து ஆறுகளிலும் தடுப்பணை கட்டி வருங்கால சந்ததியினருக்கு வளமான தமிழகத்தை விட்டுச்செல்லும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய பட்ஜெட்டில் நாடு முழுவதும் புதிதாக 157 நர்சிங் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளதை வரவேற்கிறேன்.

தமிழகத்திற்கு கூடுதல் நிதி...

விவசாயிகளுக்கு கடன் கொடுப்பதற்காக ரூ.20 லட்சம் கோடியும், ெரயில்வே திட்டங்களுக்கு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் கோடியும் ஒதுக்கியுள்ளதை வரவேற்கிறேன்.

நூறு நாள் வேலை திட்டத்திற்கு கடந்த ஆண்டு ரூ.89 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டில் ரூ.62 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதால் 30 சதவீதம் குறைந்துள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

மத்திய அரசு 6 மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கியுள்ள நிலையில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கவில்லை. தேர்தல் நடக்கவுள்ள மாநிலங்களுக்கு நிறைய நிதி ஒதுக்கியுள்ளனர். தமிழகத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். சுகாதாரத்துறைக்கு ரூ.89 ஆயிரம் கோடி, கல்வித்துறைக்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது போதுமானதாக இருக்காது.

பட்ஜெட்டில் சில திட்டங்கள் வரவேற்கத்தக்க வகையிலும், சில திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமானதாகவும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story