வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

திருவண்ணாமலை

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள், பள்ளியிறுதி வகுப்புத் தேர்ச்சி, மேல்நிலைக்கல்வி தேர்ச்சி, பட்டப்படிப்பு கல்வித்தகுதிகள் தேர்ச்சிப் பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ச்சியாக பதிவினை புதுப்பித்து வருபவர்கள் கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதி நிலவரப்படி 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களாக இருப்பின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிந்திருக்க வேண்டும்.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் 45 வயதிற்கு மிகாமலும், பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், இதர வகுப்பினர் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

மாற்றுத்திறாளிகளுக்கு வருமான உச்சவரம்பு இல்லை. ஒரு பதிவுதாரருக்கு ஒருமுறை மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும்.

உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

10-ம் வகுப்பு தவறியவர்களுக்கு மாதம் ரூ.200-ம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300-ம், மேல்நிலைக்கல்வி முடித்தவர்களுக்கு மாதம் ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 எனவும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ.600-ம், மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750-ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1000-ம் உதவித்தொகை வழங்கப்படும்.

மேற்குறிப்பிட்ட தகுதிகள் உள்ளவர்கள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெறப்பட்ட விண்ணப்பப்படிவத்திலோ அல்லது www.tnvelaivaaippu.gov.in என்ற வேலைவாய்ப்புத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்திலோ பூர்த்தி செய்ய வேண்டும்.

வருவாய்த்துறையில் வருவாய் ஆய்வாளர் அல்லது அதற்கு மேற்பட்ட அலுவலரிடமிருந்து பெறப்பட்ட சான்றும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப்புத்தகம், ஆதார் அட்டை மற்றும் அனைத்து கல்விச்சான்றுகள் அசல் மற்றும் நகல்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற மே மாதம் 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வருமானச்சான்று தேவையில்லை என்பதால் மேற்குறிப்பிட்ட இதர ஆவணங்களுடன் நேரில் வந்து விண்ணப்பம் அளிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story