மத்திய பட்ஜெட் வழக்கம்போல் பெரும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது: முதல்-அமைச்சர் கருத்து


மத்திய பட்ஜெட் வழக்கம்போல் பெரும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது: முதல்-அமைச்சர் கருத்து
x

தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் மத்திய பட்ஜெட் வழக்கம்போல் பெரும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2023-24-ம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் தமிழ்நாட்டுக்கு எந்தவித திட்ட அறிவிப்பும் இன்றி, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கூட நிதி ஒதுக்கீடு இல்லை என்பது வேதனை அளிக்கிறது.

பட்ஜெட்டில், 'தனிநபர் வருமான வரியில் கொண்டு வந்துள்ள மாற்றம்', 'இருக்கின்ற 157 மருத்துவக்கல்லூரிகளில் 157 புதிய நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு', 'மாநிலங்களுக்கு மூலதன செலவினங்களுக்காக வட்டியில்லா கடன்', 'கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது' போன்றவை வரவேற்கத்தக்க அம்சங்களாக இருப்பது ஆறுதல் என்றாலும், தனிநபர் வருமான வரி மாற்றங்கள் வெறும் புதிய முறைக்கு மட்டும்தான் பொருந்தும் என்பது, ஒரு சாராருக்கு மட்டுமே பயனளிக்கும் வகையில் இருக்கிறது. ஆகவே இந்த மாற்றங்களை, பழைய முறைக்கும் அறிமுகப்படுத்தவேண்டும்.

தமிழ்நாடு கோரிக்கை நிராகரிப்பு

ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்குவதை குறைந்தது மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கவேண்டும் என்ற தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் கோரிக்கை ஏற்கப்படாததும், தேர்தல் நடைபெறப்போகும் மாநிலங்களை மட்டுமே குறிவைத்து வளர்ச்சி திட்டங்கள், நிதி உதவிகள் அறிவிக்கப்படுவதும் மத்திய பட்ஜெட் அனைத்து மாநிலத்துக்குமானது என்பதிலிருந்து முற்றிலும் விலகி செல்வதை காட்டுகிறது.

மாநிலங்களுக்கு மூலதன கடன் வழங்குவதற்கு பல்வேறு நிபந்தனைகள் வரையறுக்கப்பட்டுள்ளதால் மாநிலங்களுக்கு முழுப்பயனும் வராது. இது, மாநிலங்களுக்கு வழங்கப்படும் கடன் என்பதால், எந்த ஒரு நிபந்தனையுமின்றி, மாநிலங்களின் தேவைகளுக்கு ஏற்ப கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த இந்த திட்டம் வழிவகை செய்யவேண்டுமே தவிர, இப்படி பல நிபந்தனைகளை விதித்து பயனை தடுப்பது முறையாகாது.

மேலும், இந்த திட்டத்தில் பொது போக்குவரத்தை ஊக்குவிக்க பழைய பஸ்களை மாற்றி, புதிய பஸ்களை வாங்கவும் அனுமதிக்கவேண்டும். நகர்ப்புற கட்டமைப்பு மேம்பாட்டுக்கு யூ.ஐ.டி.எப். என்ற புதிய நிதியை உருவாக்கியிருந்தாலும், இதற்கான ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு என்பது மிகவும் குறைவாக உள்ளது. பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் ஒதுக்கீடு ரூ.48 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.79 ஆயிரத்து 500 கோடியாக அதிகரிக்கப்பட்டிருந்தாலும், ஒரு வீட்டின் கட்டுமான விலையை உயர்த்தாவிட்டால், மாநிலங்களுக்கு அது கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும். எனவே, மத்திய அரசு இந்த திட்டத்தின்கீழ், உயர்ந்து வரும் விலைவாசிக்கு ஏற்ப தனது பங்கை உயர்த்தவேண்டும்.

மிகப்பெரிய ஆபத்து

மத்திய அரசின் திட்டங்கள் புதிய வழிமுறைப்படி தொடக்க முயற்சியாக செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நியாயமாக மாநிலங்களுக்கு வரவேண்டிய உரிய நிதி ஆதாரங்களை மறுப்பதற்காக ஒரு கருவியாக இது பயன்படுத்தப்படும் மிகப்பெரிய ஆபத்து இதில் இருக்கிறது. ஆகவே, இந்த திட்டத்தை மாநிலங்களுடன் கலந்தாலோசித்த பின்னர், மாநிலத்துக்கு வரவேண்டிய நிதி ஆதாரங்களை மறுப்பதற்கு வாய்ப்பில்லாத வகையில் மாற்றிச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பட்ஜெட் திட்டத்தில் பல்வேறு புதிய திட்டங்களை அறிவிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் அதேவேளையில், இந்த திட்டங்களுக்காக தனி நிதி ஒதுக்கீடு செய்யாதது வருந்தத்தக்கது. கொரோனா பெருந்தொற்றில் இருந்து நம் நாடு மீண்டு வரும் இந்த சூழலில், மத்திய அரசின் பட்ஜெட் மீது பெரும் எதிர்பார்ப்பு மக்களிடையே இருந்தது.

பெரும் ஏமாற்றம்

அந்த எதிர்பார்ப்பு இன்று பொய்த்துப்போயிருக்கிறது. இது மத்திய அரசின் கட்சி, ஆட்சியில் உள்ள மாநிலங்களில், குறிப்பாக தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் வளர்ச்சி திட்டங்களுக்கான பட்ஜெட் போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளது. நாட்டில் நிலவும் வேலை இல்லா திண்டாட்டம், விலைவாசி ஏற்றம், பணவீக்கம் ஆகியவற்றை புறக்கணித்து, மாநிலங்களின் நிதி சுதந்திரத்துக்கு எந்தவித ஆக்கப்பூர்வமான முயற்சிகளையும் முன்னெடுக்காமல் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டானது ஏழை-எளிய நடுத்தர மக்களுக்கும், சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் எந்த ஒரு நம்பிக்கையையும் அளிக்கவில்லை. சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் இந்த மத்திய பட்ஜெட் வழக்கம்போல் பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story