சமூகநீதியின் 'கேன்சர்' தி.மு.க - சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி பேச்சுக்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன் கண்டனம்


சமூகநீதியின் கேன்சர் தி.மு.க - சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி பேச்சுக்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன் கண்டனம்
x

தி.மு.க., சமூகநீதியின் கேன்சராக இருந்து கொண்டு மக்கள் நலனை கெடுத்து, தன் அரசியல் ஆதாயத்தை தேடுகிறது என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.

சென்னை,

சனாதன ஒழிப்பு, சமூக நீதி என்று மூச்சுக்கு முன்னூறு முறை வாய்சவடால் விட்டு கொண்டிருக்கும் தி.மு.க., சமூகநீதியின் கேன்சராக இருந்து கொண்டு மக்கள் நலனை கெடுத்து, தன் அரசியல் ஆதாயத்தை தேடுகிறது என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

'திட்டங்கள் ஏதுமில்லா ஊதாரிகள்' என்று, திமுக-வினரை அன்று பெரியார் சொன்னதை இன்று ஊர்ஜிதப்படுத்தி வருகிறார்கள் அவரின் வாரிசுகள். மத்திய அரசு எத்தனையோ மக்கள் நல திட்டங்கள் வழங்கியுள்ள போதும் அதை சரியாக எடுத்து செல்லாமல், தனது ஆட்சியின் மீதிருக்கும் அதிருப்தியை மடைமாற்ற எதை தின்றால் பித்தம் தெளியும் என்பதற்காக, இந்து மக்களின் நம்பிக்கைகளை அவமதிக்கும் வகையில் 'சனாதனத்தை' கையில் எடுத்திருக்கிறது தி.மு.க.

தாத்தா, மகன், பேரன் என்று இன்றளவும் அரசியலில், குடும்ப ஆதிக்கத்தை செலுத்தும் இவர்கள்தான் சனாதனத்தின் எதிரிகள். அண்ணா உருவாக்கிய கட்சியை, எத்தனையோ சிறந்த தலைவர்கள் இருந்தும் அவர்களுக்கு வழிவிடாமல் ஒரே குடும்பம் அபகரித்திருப்பதும் சனாதனத்துக்கு எதிரானது. இன்னும் சொல்ல போனால் திராவிடம் என்கிற வார்த்தையை வழங்கியதே சனாதனம் தான். சனாதனம் என்றால் இந்துமதம், தர்மம் என்று பொருள்படுகிறது.

சனாதன ஒழிப்பு மாநாடு என்றால் இந்துமத ஒழிப்பு மாநாடு என்று தான் பொருள். அப்படி இருக்க, கிறிஸ்துவமத ஒழிப்பு மாநாடு அல்லது இஸ்லாம் மத ஒழிப்பு மாநாடு என ஒரு மாநாட்டை உதயநிதியோ அல்லது போலி மார்க்சிஸ்ட் கட்சியால் கற்பனையில் கூட நடத்த இயலுமா? உதயநிதியின் பேச்சு இந்துமதத்தின் மீதான வன்மம் நிறைந்த தாக்குதல் என்பதற்கு சாட்சி நாடே கொதித்திருப்பதுதான்.

ஏதோ சினிமாவில் பேசும் வசனம் போல், தனது அரசியல் அறியாமையால் மத உணர்வுகளை தூண்டிவிட்டு மாற்று மதத்தினர் வாக்குகளை பெற, சமூகத்தின் அமைதியை கெடுத்து சாதி, மத வேற்றுமைகளை உண்டாக்கியுள்ள உதயநிதியின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதனால் தான் தீவிர பாஜக எதிர்ப்பாளர்களான மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால் கூட அவரின் பேச்சை கண்டித்து 'அரசியலில் பொடிபையன்' என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

கீழ்வெண்மணி ஆரம்பித்து நாங்குநேரி வரை நாறி கொண்டிருக்கிறது திராவிட மாடலின் சனாதன ஒழிப்பு. நூற்றாண்டை நெருங்கும் திமுக-வில் ஏன் இதுவரை ஒரு பெண்தலைவர், தலித்தலைவர் தலைமை வகிக்கவில்லை ஆணாதிக்கத்தின் ஆணிவேறாக ஊடுருவி இருக்கும் திமுக சனாதனம் குறித்து பேசுவது நகைச்சுவையாக இல்லையா? மாவட்ட செயலாளர்கள் முதல் மாநில அமைச்சர்கள் வரை பொறுப்பு வகிக்க திமுக-வில் தலித்துகளுக்கு என்ன பஞ்சமா? இல்லையே..! சாதிய ஆதிக்கத்தின் மொத்த உருவமாக நிமிர்ந்து நிற்கிறதே திமுக! இதில் சமூக நீதி குறித்து வகுப்பெடுக்கிறார்கள்.

வெறும் ஏட்டளவிலும், சொல்லளவிலும் சனாதன ஒழிப்பு, சமூக நீதி என்று மூச்சுக்கு முன்னூறு முறை வாய்சவடால் விட்டு கொண்டிருக்கும் தி.மு.க., சமூகநீதியின் கேன்சராக இருந்து கொண்டு மக்கள் நலனை கெடுத்து, தன் அரசியல் ஆதாயத்தை தேடுகிறது. தொடர்ந்து மதத்தை வைத்து அரசியல் நாடகமாடி ஒன்றாக இருக்கும் மக்களை பிளவுப்படுத்துகிறது, குளிர்காய்கிறது! இனியும் உங்கள் போலி அரசியல் முகமூடியை நம்ப நாட்டு மக்கள் தயராக இல்லை. இதற்கெல்லாம் தக்க பதிலடி கொடுக்க ஆயத்தமாகவே இருக்கிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


Next Story