தூய்மை காவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தல்


தூய்மை காவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரியலூர்

ஆண்டிமடம்:

தமிழ்நாடு உள்ளாட்சித்துறை பணியாளர்கள் சங்கத்தின் ஆண்டிமடம் ஒன்றிய பேரவை கூட்டம் ஆண்டிமடத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அரியலூர் மாவட்ட பொருளாளர் கெங்காசலம் தலைமை தாங்கினார். ஒன்றிய துணை தலைவர் பரசுராமன், துணை செயலாளர் பஞ்சமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பு செயலாளர் செல்வநாதன், பொருளாளர் ஜோதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில், தூய்மை பணியாளர்களுக்கு தொழிலாளர் நலவாரியம் அமைக்க வேண்டும். 10 ஆண்டுகள் பணி முடித்த அனைத்து தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். அரசு விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் பணிபுரியும்போது இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். தூய்மை காவலர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக ஒன்றிய தலைவர் திருவாசகம் வரவேற்றார். இதில் ஆண்டிமடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தூய்மை காவலர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை செயலாளர் பாண்டியன் நன்றி கூறினார்.


Next Story