வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலால் வைகை, பாண்டியன் எக்ஸ்பிரஸ் மதுரையில் இருந்து புறப்படும் நேரம் இன்று முதல் மாற்றம்


வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலால் வைகை, பாண்டியன் எக்ஸ்பிரஸ் மதுரையில் இருந்து புறப்படும் நேரம் இன்று முதல் மாற்றம்
x
தினத்தந்தி 30 Sep 2023 8:28 PM GMT (Updated: 30 Sep 2023 8:35 PM GMT)

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலால் வைகை, பாண்டியன் எக்ஸ்பிரஸ் மதுரையில் இருந்து புறப்படும் நேரத்தில் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மதுரை


மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட செங்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் மதுரை-சென்னை வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்கள் புறப்படும் நேரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, நெல்லை-சென்னை வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலால் பல்வேறு ரெயில்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதில் மதுரை-சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்படுவதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதைதொடர்ந்து வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் மதுரையிலிருந்து காலை 7.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 6.40 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து மதுரை வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 9.15 மணிக்கு பதிலாக இரவு 9.30 மணிக்கு மதுரை வந்தடையும்.

பாண்டியன் எக்ஸ்பிரஸ்

மதுரை-கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்(வ.எண்.16722) மதுரையிலிருந்து காலை 7.25 மணிக்கு பதிலாக காலை 7.00 மணிக்கு புறப்படும். மதுரை-சென்னை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.12638) மதுரையிலிருந்து இரவு 9.35 மணிக்கு பதிலாக இரவு 9.20 மணிக்கு புறப்படும். மதுரை-விழுப்புரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16868) மதுரையிலிருந்து அதிகாலை 4.05 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக அதிகாலை 3.35 மணிக்கு புறப்படும். செங்கோட்டையில் இருந்து மதுரை வழியாக சென்னை வரை இயக்கப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் மதுரையில் இருந்து சென்னை செல்லும் போது மின்சார என்ஜினும், மதுரையில் இருந்து செங்கோட்டை செல்லும் போது டீசல் என்ஜினும் பொருத்தப்பட்டு இயக்கப்படும். இதற்கிடையே மதுரை-செங்கோட்டை இடையோன ரெயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் இன்று முதல் செங்கோட்டையில் இருந்து சென்னை வரை மின்சார என்ஜின் மூலம் இயக்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து, இந்த ரெயில் மதுரையில் இருந்து இரவு 9.55 மணிக்கு பதிலாக இரவு 9.45 மணிக்கு சென்னை புறப்பட்டு செல்லும். மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து அதிகாலை 4.45 மணிக்கு பதிலாக அதிகாலை 4.30 மணிக்கு செங்கோட்டை புறப்பட்டு செல்லும்.


Next Story