கடல்போல் காட்சி அளிக்கும் வைகை அணை


கடல்போல் காட்சி அளிக்கும் வைகை அணை
x

நீர்வரத்து அதிகரித்து, முழு கொள்ளளவை எட்டியதால் கடல்போல் வைகை அணை காட்சி அளிக்கிறது.

தேனி

வைகை அணை

ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. தென்மேற்கு பருவமழையினால் கடந்த மாதம் 13-ந்தேதி முழுக்கொள்ளளவாக நிர்ணயம் செய்யப்பட்ட 69 அடியை எட்டியது. வைகை அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் முதல் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காகவும் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதைத்தவிர தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் வைகை அணையில் இருந்து உபரிநீரும் திறக்கப்பட்டது. எப்போதும் 69 அடியில், நிலை நிறுத்தப்படும் வைகை அணை இந்த ஆண்டு அதன் முழு உயரமான 71 அடி வரையில் தண்ணீர் தேக்கப்பட்டு உள்ளது.

கடல் போல்...

வைகை அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்ட போதும், வைகை அணைக்கு போதுமான நீர்வரத்து இருந்ததால் அணையின் நீர்மட்டம் கடந்த ஒரு மாதமாக குறையவே இல்லை. தற்போது வைகை அணை கண்களை கொள்ளை கொள்ளும் வகையில் கடல் போல் காட்சி அளிக்கிறது. வைகை அணையின் நீர்மட்டம் நிரம்பிய நிலையிலேயே உள்ளதால், 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நேற்று காலை 6 மணி நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 70.57 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2,286 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,069 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.


Next Story