வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி தற்காலிக நிறுத்தம்


வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி தற்காலிக நிறுத்தம்
x
தினத்தந்தி 10 April 2024 7:02 AM GMT (Updated: 10 April 2024 8:50 AM GMT)

ரூ.100 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகளுக்கு கடந்த மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது

வடலூர்,

வடலூர் பார்வதிபுரம் பகுதியில் வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபை, தரும சாலை ஆகியவை உள்ளன. இங்கு மாதம்தோறும் 6 திரைகள் நீக்கியும், ஆண்டுக்கு ஒரு முறை தை பூச திருநாள் அன்று மட்டும் 7 திரைகள் நீக்கியும் ஜோதி தரிசனம் நடைபெற்று வருகிறது. இதை காண உள்ளூர், வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் வந்து செல்வார்கள்.

இந்த நிலையில் ஞானசபை வளாகத்தில் (பெருவெளியில்) ரூ.100 கோடியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த மாதம் 17-ந் தேதி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கட்டிடம் கட்டுவதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கி, நடைபெற்று வருகின்றன.

இது ஒரு புறம் இருக்க, ஞானசபை வளாகத்தில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு பார்வதிபுரம் கிராம மக்கள், சன்மார்க்க சங்கத்தினர், பா.ம.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி பல போராட்டங்களும் நடைபெற்றது. இது தொடர்பான வழக்கு கோா்ட்டில் நிலுவையில் உள்ளது.

இதனை தொடர்ந்து சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் பார்வதிபுரம் கிராமமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஞானசபை வளாகத்தில் திரண்டனர். பின்னர் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்காக நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் வடலூரில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நடத்திய போராட்டத்தால் கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.


Next Story