சாலையில் வேன் கவிழ்ந்தது;14 பேர் படுகாயம்


தினத்தந்தி 17 Oct 2023 7:15 PM GMT (Updated: 17 Oct 2023 7:15 PM GMT)

சுல்தான்பேட்டை அருகே வேன் டயர் வெடித்து, கவிழ்ந்த விபத்தில் 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

கோயம்புத்தூர்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா குளத்துப் பாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 37). வேன் டிரைவர். இவர் நேற்று பொள்ளாச்சி அருகே உள்ள கோபாலபுரத்தில் தனது உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க 14 பேரை குளத்துப்பாளையத்தில் இருந்து கோபாலபுரத்திற்கு வேனில் அழைத்து வந்தார். நிகழ்ச்சி முடிந்த பின்னர், மதியம் குளத்து பாளையம் திரும்பி கொண்டிருந்தார். மதியம் 2 மணி அளவில் சுல்தான்பேட்டை காமநாயக்கன்பாளையம் அருகே சென்றபோது வேனின் முன்பக்கம் டயர் திடீரென வெடித்தது. இதில் நிலைதடு மாறிய வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் வேனின் முன்பக்க கண்ணாடி அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் வேனில் இருந்த டிரைவர் உள்பட 14 பேரும் படுகாயம் அடைந்தனர். இதனை கவனித்த அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் பழனிசாமி (56) ,என்பவர் மட்டும் மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து சுல்தான்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.



Next Story