சேலத்தில் வாரிசு, துணிவு திரைப்படங்கள் ரிலீஸ்: ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு-தியேட்டர் கண்ணாடி உடைப்பு


சேலத்தில் வாரிசு, துணிவு திரைப்படங்கள் ரிலீஸ் ஆனதை தொடர்ந்து ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது தியேட்டரின் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. 3 பேர் காயம் அடைந்தனர்.

சேலம்

வாரிசு- துணிவு படம் ரிலீஸ்

நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படமும், அஜித் நடித்துள்ள துணிவு படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று அதிகாலை தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. இரு முன்னணி நடிகர்கள் நடித்துள்ள திரைப்படங்கள் ஒரேநாளில் வெளியானதால் அவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும், பரபரப்பும் நிலவியது.

சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மொத்தம் உள்ள 70 தியேட்டர்களில் 50-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வாரிசு, துணிவு படங்கள் திரையிடப்பட்டன. பாதுகாப்புக்காக அனைத்து திேயட்டர்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

சேலம் மாநகரில் உள்ள தியேட்டர்களில் நேற்று அதிகாலை 1 மணிக்கு அஜித்தின் துணிவு படமும், அதிகாலை 4 மணிக்கு விஜயின் வாரிசு படமும் தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. இதனால் தியேட்டர்கள் முன்பு திரண்டிருந்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்து ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ரசிகர்கள் கொண்டாட்டம்

சேலம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டரில் வாரிசு, துணிவு ஆகிய 2 படமும் வெளியானதால் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது, சிலர் ஆபத்தை உணராமல் பட்டாசுகளை வெடித்தும், ஆட்டம், பாட்டம் என கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த சமயத்தில் அதிக சத்தத்துடன் ஒலி எழுப்பியபடி மோட்டார் சைக்கிளில் சென்ற சிலரை போலீசார் கைது செய்ததோடு அவர்களின் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையே 2 படங்களும் தியேட்டர்களில் திரையிடப்பட்டதை தொடர்ந்து ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, ஒருவரை ஒருவர் முண்டியடித்துக்கொண்டு தியேட்டருக்குள் செல்ல முயன்றனர்.

கண்ணாடி உடைப்பு

இதனால் அங்கிருந்த தியேட்டர் கண்ணாடி உடைந்து நொறுங்கின. மேலும், 2 ரசிகர்கள் கேட்டின் மீது ஏறி கீழே குதித்ததால் அவர்களது காலில் கண்ணாடி துண்டுகள் குத்தியதில் காயம் அடைந்தனர். இருப்பினும், அதை பொருட்படுத்தாமல் ரசிகர்கள் தியேட்டருக்குள் சென்று படம் பார்த்தனர்.

இதேபோல், பழைய பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம், 5 ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அஜித், விஜய் நடித்த திரைப்படங்கள் வெளியானதால் அங்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பின்னர் அவர்கள் ஆரவாரத்துடன் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தியேட்டர் திரை கிழிப்பு

ஆத்தூர் சினிமா தியேட்டர்களில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் அஜித் நடித்த துணிவு, விஜய் நடித்த வாரிசு திரைப்படங்கள் திரையிடப்பட்டன. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்தனர். ஆத்தூர் புதிய பஸ் நிலையம் அருகில் அஜித் நடித்த துணிவு திரைப்படம் திரையிடப்பட்டு இருந்தது. இந்த படத்தைப் பார்க்க வந்த ரசிகர்கள் அதிகாலை படத்தை விட்டு வெளியே வரும்போது ஆர்வ மிகுதியால் தியேட்டரின் திரையை கிழித்தனர்.

பின்னர் வெளியே வரும்போது ஒரு சிலர் நடனமாடிக் கொண்டு வந்து தியேட்டரில் கேட்டை அடித்து நொறுக்கியதாக தெரிகிறது. அதன்பிறகு தியேட்டரில் திரைச்சீலை மாற்றப்பட்டது. கேட் ஊழியர்களால் சரி செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஆத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தினர்.


Next Story