விற்பனையாகாமல் முட்டைகோஸ் தேக்கம்


விற்பனையாகாமல் முட்டைகோஸ் தேக்கம்
x

திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் முட்டைகோஸ் வரத்து அதிகரித்துள்ளதால் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் டன் கணக்கில் முட்டைகோஸ் தேக்கமடைந்துள்ளது.

திருப்பூர்

திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் முட்டைகோஸ் வரத்து அதிகரித்துள்ளதால் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் டன் கணக்கில் முட்டைகோஸ் தேக்கமடைந்துள்ளது.

விற்பனை சரிவு

திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையத்தில் தினசரி மார்க்கெட் உள்ளது. இங்கு திருப்பூர் சுற்றுவட்டார பகுதியிலிருந்தும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதில் பெரிய வெங்காயம், முட்டைகோஸ் போன்றவை பெரும்பாலும் வெளிமாநிலங்களிலிருந்து கொண்டுவரப்படுகின்றன. தற்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் முட்டைகோசின் வரத்து கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. ஒரு நாளைக்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட முட்டைகோஸ் மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. வரத்து அதிகரிப்பு காரணமாக விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் 50 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை முட்டைகோஸ் மொத்த விற்பனை விலையாக ரூ.200 முதல் ரூ.250 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி ஒரு கிலோ முட்டைகோசிற்கு ரூ.5 மட்டுமே கிடைக்கிறது. வழக்கத்தை விட சுமார் 70 சதவீத விற்பனை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

டன் கணக்கில் தேக்கம்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட ஒரு மூட்டை முட்டைகோஸ் ரூ.350 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது விற்பனை பெருமளவில் குறைந்துள்ளதால் மார்க்கெட்டில் முட்டைகோஸ் மூட்டை, மூட்டையாக தேங்கி கிடக்கின்றன. சுமார் 50 டன்னுக்கும் அதிகமாக முட்டைகோஸ் தேங்கி கிடக்கும் என வியாபாரிகள் கூறுகின்றனர். விற்பனை சரிவு காரணமாக சிலர் கடைகளுக்கு கொண்டு வரப்பட்ட முட்டைகோஸ்களை இறக்காமல், அப்படியே மூட்டைகளுடன் வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். கொள்முதல் செய்வதில் இருந்து மார்க்கெட்டிற்கு கொண்டு வருவது வரை ஆகும் செலவை கணக்கிடும் போது நஷ்டத்திற்கு தான் விற்பனை செய்ய வேண்டியுள்ளது என வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். மொத்த மார்க்கெட்டில் முட்டைகோஸ் விலை அடியோடு சரிந்துள்ள போதிலும் சில்லரை வியாபாரத்தில் இதன் விலையில் மாற்றம் உள்ளது.



Related Tags :
Next Story