சேலத்தில் பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்


சேலத்தில் பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்
x

ஆயுத பூஜையை முன்னிட்டு சேலத்தில் பூஜை பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்தது. ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சேலம்

ஆயுத பூஜை

இந்துக்களின் முக்கிய பண்டிகளில் ஒன்றான ஆயுதபூஜையை முன்னிட்டு வீடுகளில் மட்டுமின்றி தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், மோட்டார் தொழிற்சாலை, கல்வி நிறுவனங்களில் சுண்டல், சர்க்கரை பொங்கல், பொரி, அவல், பழங்கள் உள்ளிட்டவை படையலிட்டு வழிபடுவதை பொதுமக்கள் காலம் காலமாக கடைபிடித்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று (திங்கட்கிழமை) ஆயுதபூஜையும், நாளை (செவ்வாய்க்கிழமை) விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆயுத பூஜையை கொண்டாடும் வகையில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களை சுத்தம் செய்து வர்ணம் பூசுவது உள்ளிட்ட பணிகளில் உரிமையாளர்களும், தொழிலாளர்களும் ஈடுபட்டனர்.

சேலம் செவ்வாய்பேட்டை, பால் மார்க்கெட், கடைவீதி, பட்டை கோவில், திருச்சி மெயின்ரோடு, ஆனந்தா இறக்கம் காய்கறி மார்க்கெட், அஸ்தம்பட்டி, சூரமங்கலம் உள்ளிட்ட பல இடங்களில் நேற்று சாம்பல் பூசணி விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்தன. அதனை ஏராளமான பொதுமக்கள் திருஷ்டி கழிப்பதற்காக வாங்கி சென்றனர். ஒரு கிலோ சாம்பல் பூசணிக்காய் ரூ.15 முதல் ரூ.20 வரைக்கு விற்பனை செய்யப்பட்டது.

பொரி, கடலை விற்பனை

அதேபோல்செவ்வாய்பேட்டை, கடைவீதி, பால் மார்க்கெட், வின்சென்ட், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, 4 ரோடு பகுதிகளில் உள்ள கடைகளிலும், சாலையோரமாக தற்காலிக அமைக்கப்பட்டிருந்த கடைகளிலும் பொரி, கடலை, அவல், வெல்லம், நாட்டு சர்க்கரை, எள் உருண்டை, கற்கண்டு, தேங்காய் விற்பனை மும்முரமாக நடந்தது. ஒரு பக்கா பொரி ரூ.15-க்கும், 7 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை பொரி ரூ.550-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

குறிப்பாக செவ்வாய்பேட்டையில் உள்ள பொரி கடைகளில் தொழிற்சாலைகளில் சாமி கும்பிடுவதற்காக மொத்தமாக பொரிகளை ஏராளமானோர் வாங்கி சென்றதை காணமுடிந்தது. அதேபோல் வீடுகளுக்கு தேவையான பொரி, கடலைகளை பொதுமக்கள் தங்களுக்கு தேவைக்கு ஏற்ப வாங்கி சென்றனர். இதனால் செவ்வாய்பேட்டை, கடைவீதி, சின்னக்கடை வீதி, பால் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.

பூஜை பொருட்கள்

சேலம் அஸ்தம்பட்டி, செவ்வாய்பேட்டை, கடைவீதி, முதல் அக்ரஹாரம் உள்ளிட்ட பல பகுதிகளில் வாழைகுலை, பழங்கள் மற்றும் பூஜைக்கு தேவையான பொருட்கள் விற்பனையும் மும்முரமாக நடந்தது. ஆப்பிள், மாதுளை, திராட்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, கொய்யா உள்ளிட்ட பழங்கள் விற்பனையும் மும்முரமாக நடந்தது. ஒரு கிலோ ஆப்பிள் ரூ.150-க்கும், மாதுளை ரூ.150 முதல் ரூ.200-க்கும், திராட்சை ரூ.100-க்கும், சாத்துக்குடி ரூ.80-க்கும், கொய்யாப்பழம் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் தேங்காய், வாழைப்பழம், மா இலை, வாழைக்கன்று, அலங்கார தோரணங்கள் மற்றும் பூஜை பொருட்களின் விற்பனையும் ஜோராக நடந்தது. பூஜை பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் சின்னக்கடைவீதியில் அதிகளவில் திரண்டதால் அங்கு கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பூக்கள் விலை உயர்வு

இது ஒருபுறம் இருக்க, ஆயுத பூஜையை முன்னிட்டு சேலம் பழைய பஸ்நிலையம் பகுதியில் உள்ள வ.உ.சி. பூ மார்க்கெட்டில் நேற்று பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்திருந்தது. அதாவது குண்டுமல்லி ஒரு கிலோ ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ கனகாம்பரம், சன்னமல்லி மற்றும் முல்லை ரூ.700-க்கும், ஜாதி மல்லி ரூ.280-க்கும், காக்கட்டான் ரூ.400-க்கும், வெள்ளை மற்றும் செவ்வரளி ரூ.450-க்கும், சம்பங்கி ரூ.200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆயுதபூஜைக்கு பூக்களின் தேவை இருப்பதால் அதன் விலை உயர்ந்து இருந்தாலும் பொதுமக்கள் அதிகளவில் வாங்க சென்றனர்.


Next Story