ஓடும் பஸ்சில் துணிகரம்: மயக்க சாக்லெட் கொடுத்து பெண்ணிடம் தாலி சங்கிலி திருட்டு - போலீசார் விசாரணை


ஓடும் பஸ்சில் துணிகரம்: மயக்க சாக்லெட் கொடுத்து பெண்ணிடம் தாலி சங்கிலி திருட்டு - போலீசார் விசாரணை
x

ஓடும் பஸ்சில் மயக்க சாக்லெட் கொடுத்து பெண்ணிடம் தாலி சங்கிலியை திருடிச்சென்ற சிறுவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை

சென்னை திருவல்லிக்கேணி, தேவராஜ் முதலி தெருவைச் சேர்ந்தவர் சாந்தி (வயது 56). இவர், நேற்று முன்தினம் வியாசர்பாடியில் வசிக்கும் தனது மகள் வீட்டுக்கு மாநகர பஸ்சில் ஏறிச்சென்றார். பஸ்சில் பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருந்த சிறுவர்கள், சாந்திக்கு சாக்லெட் ஒன்றை சாப்பிட கொடுத்துள்ளனர். சாக்லெட்டை சாப்பிட்டவுடன் சாந்திக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. அப்படியே பஸ்சின் சீட்டில் சாய்ந்து விட்டார். சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்த சாந்திக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலி சங்கிலி மாயமாகி இருந்தது. பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருந்த சிறுவர்களையும் காணவில்லை. அப்போது பஸ் புரசைவாக்கம் டவுட்டன் பகுதியில் நின்றது. உடனே சாந்தி பஸ்சை விட்டு இறங்கி விட்டார்.

பஸ்சில் தனது பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருந்த சிறுவர்கள், தனக்கு மயக்க சாக்லெட்டை கொடுத்து மயக்கி, தனது கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை பறித்து சென்றது சாந்திக்கு தெரியவந்தது. சாந்தி தனது மகளை வரவழைத்து, அவர் மூலம் தங்க சங்கிலி திருட்டு போனது குறித்து வேப்பேரி போலீசில் புகார் கொடுத்தார்.

உதவி கமிஷனர் அரிக்குமார் தலைமையில் வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பஸ்சில் சாந்தி உட்கார்ந்திருந்த சீட்டுக்கு, பின் சீட்டில் 2 பெண்கள் உட்கார்ந்திருந்ததாகவும், அவர்கள்தான் இதில் குற்றவாளிகளாக இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.


Next Story