மாவட்டத்தில் வாக்காளர் விவரங்கள் சரிபார்க்கும் பணி


மாவட்டத்தில் வாக்காளர் விவரங்கள் சரிபார்க்கும் பணி
x

கரூர் மாவட்டத்தில் அடுத்த மாதம் 21-ந்தேதி வரை வாக்காளர் விவரங்கள் சரிபார்க்கும் பணி நடக்கிறது.

கரூர்

வாக்காளர் பட்டியல்

கரூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பிரபுசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

1.1.2024-ஐ தகுதியேற்பு நாளாக கொண்டு 5.1.2024 அன்று வாக்காளர் பட்டியல் வெளியிட பல்வேறு முன்திருத்த நடவடிக்கைகளுக்கான அறிவுரைகள் இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி 1.1.2024-ஐ தகுதியேற்பு நாளாக கொண்டு கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம்கள் நடத்தி வருகிற 5.1.2024 அன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

21-ந்தேதி வரை ...

இதனை முன்னிட்டு, முன்திருத்த நடவடிக்கையாக குடும்பத்தில் உள்ள அனைத்து வாக்காளர் விவரங்களையும் சரிபார்த்து வருகிற ஆகஸ்டு மாதம் 21-ந்தேதி வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான செயலியில் பதிவேற்றம் செய்கின்றனர்.

தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் பெயர் நீக்கம் செய்தல் மற்றும் வாக்குச்சாவடிகள் பிரித்தல், இடம் மாற்றம், மற்றும் பெயர் மாற்றம் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

வீடு, வீடாக...

இதன் முதற்கட்டமாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக குடும்பத்தில் உள்ள வாக்காளர் விவரங்களை சரிபார்த்திட வருகை தர உள்ளனர்.எனவே, கரூர் மாவட்டத்தில் இப்பணியினை சிறப்பாகவும், விரைவாகவும் மேலும் 100 சதவீதம் சரியாகவும், துரிதமாகவும் முடித்திடும் பொருட்டு பொதுமக்கள் தங்கள் வீட்டிற்கு கணக்கெடுப்பு பணிக்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தேவையான விவரங்களை அளித்து, ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story